330 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

330 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் 330 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இந்த மரணங்களுக்கு தண்ணீரில் உருவாகும் விஷத்தன்மையுடைய பாக்டீரியாதான் காரணம் என தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 330 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டுபிடித்தனர்.

உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை ஆகையால் இவை வேட்டையாடப்படவில்லை என தெரியவந்தது. ஆனாலும், பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. 

இதனால் நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக யானைகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என பரவலான கருத்து நிலவின. 

மேலும், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்ற தொற்று யானைகளுக்கும் பரவி இருக்கலாம் எனவும் அதனால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் கருதினர்.

மேலும், சில யானைகள் பாதை தெரியாமல் உடல் நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியை தொடர்ந்து சுற்றிக்கொண்டே கிழே விழுந்து உயிரிழந்தன.

இதையடுத்து, உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென் ஆப்பிரிக்கா, ஜிப்பாவே, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுன.

இந்நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானது. இதில் சயனோ பாக்டீரியா என்ற ஒரு வகை நச்சுத்தன்மை உடைய பாக்டீரியா மூலமாகவே யானைகள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. 

தேங்கி கிடக்கும் தண்ணீரில் இந்த வகை நச்சு பாக்டீரியாக்கள் உருவாகும். அந்த தண்ணீரை யானைகள் குடித்ததால் பாக்டீரியா கிருமி மூலம் நோய் தொற்று ஏற்பாட்டு இயற்கையான நச்சு மூலமாகவே யானைகள் உயிரிழந்துள்ளது என போட்ஸ்வானா வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயனோ பாக்டீரியா நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், தேங்கிக்கிடக்கும் அதே தண்ணீரை குடித்த மற்ற உயிரினங்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை என்ற தகவல் தெரியவில்லை என்றும் அது தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை மற்றும் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகம் போட்ஸ்வானா வனத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment