(நா.தனுஜா)
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பில் மக்கள் இன்னமும் போதியளவிற்குத் தெளிவடையாத நிலையில், அது வெறுமனே ஒரு வெள்ளைத் தாளாகக் கருதப்பட்டு விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கின்றார்.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழங்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கரு ஜயசூரிய பின்வருமாறு கூறியிருக்கிறார்.
தற்போது முன்மொழியப்பட்டிருக்கின்ற அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் மீது இன்னமும் கவனம் குவிக்கப்படாத நிலையில், அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் மக்கள் போதியளவு தெளிவடையாத நிலையே காணப்படுகின்றது.
அதிலுள்ள முன்மொழிவுகள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருப்பதனால் அதனையொரு வெள்ளைக் காகிதமாகக் கருதி, அது குறித்து மக்கள் மத்தியில் விரிவான கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.
அதேவேளை இந்த 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவரசம் காண்பிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளடங்கலாகப் பலரும் அதிருப்தி வெளியிட்டிருப்பதனால் 20 வது திருத்த யோசனையை வெள்ளைத்தாளாகக் கருதி விரிவான தர்க்கத்திற்கு உட்படுத்துவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
No comments:
Post a Comment