ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி ! நிலை குலைந்தது ஐக்கிய தேசியக் கட்சி - முழுமையான ஒரு பார்வை ! - News View

About Us

About Us

Breaking

Thursday, August 6, 2020

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி ! நிலை குலைந்தது ஐக்கிய தேசியக் கட்சி - முழுமையான ஒரு பார்வை !

பாராளுமன்ற தேர்தல் – Makkalkural.lk
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையிலான முடிவுகளின் பிரகாரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. தேசியப்பட்டியலில் 17 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 145 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக சஜித் பிரேமதாஸ வழி நடாத்திய ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், 7 தேசியப்பட்டியல் ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

எனினும் இலங்கையில் பழமைவாய்ந்த பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட பெறாமல் பாரிய தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் களம் இறங்கிய மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்புக்கு இரு பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹாவில் அவ்வாசனங்கள் அக்கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனைவிட, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இரு ஆசனங்களையும், தனித்து போட்டியிட்ட இடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதனைவிட புத்தளத்தில் முஸ்லிம் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தினை பெற்றுள்ளது. அத்துடன் தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தினையும், யாழில் தனித்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது. இதனைவிட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியனவும் தலா ஒவ்வொரு ஆசனங்கள் வீதம் கைப்பற்றியிருந்தன.

1.தென் மாகாணம்

மாத்தறை மாவட்டம்
மாத்தறை மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3 இலட்சத்து 52 ஆயிரத்து 217 வாக்குகளைப் பெற்று அம்மாவட்டத்தை வெற்றி கொண்டுள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள தெனியாய, ஹக்மன, அக்குரஸ்ஸ, கம்புறுப்பிட்டிய, தெவிநுவர, மாத்தறை, வெலிகம ஆகிய 7 தேர்தல் தொகுதிகளையும் வெற்றி கொண்டுள்ள அந்த கட்சி, அம்மாவட்டத்தில் அளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளில் 73.63 வீதமான வாக்குகளை தனதாக்கிக் கொண்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி 72 ஆயிரத்து 740 வாக்குகளையும் (15.22 வீதம்), தேசிய மக்கள் சக்தி 37 ஆயிரத்து 136 (7.75 வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 7 ஆயிரத்து 631 வாக்குகளையும் (1.60 வீதம்) பெற்றுக் கொண்டுள்ளன. அதன்படி அம்மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 6 இலட்சத்து 30 ஆயிரத்து 438 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், இம்முறை பொதுத் தேர்தலில் 5 இலட்சத்து 957 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அவ்வாறு வாக்களித்தவர்களில் 22 ஆயிரத்து 578 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்ப்ட்டுள்ளதுடன் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 379 வாக்குகள் மட்டுமே ஏற்ற்க்கொள்ளப்பட்டுள்ளன.

காலி மாவட்டம்
காலி மாவட்டத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே வெற்றி கொண்டுள்ளது. பலப்பிட்டிய, அக்மீமன, பத்தேகம, பெந்தர, காலி, ஹபராதுவ, ஹினிதும, கரந்தெனிய , ரிதிகம, அம்பலாங்கொட ஆகிய அம்மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் வெற்றி கொண்டு மாவட்டத்தின் வெற்றியை உறுதி செய்துள்ள அக்கட்சி, மொத்தமாக 4 இலட்சத்து 30 ஆயிரத்து 334 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

இது, அளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளில் 70.54 வீதமாகும். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 456 வாக்குகளையும் (18.93 வீதம்),தேசிய மக்கள் சக்தி 29 ஆயிரத்து 963 வாக்குகளையும் (4.91 வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 18 ஆயிரத்து 968 வாக்குகளையும் (3.11) பெற்றுக் கொண்டுள்ளன. 

அதன்படி, காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 7 ஆசங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசங்களும் உரித்தாகியுள்ளன.

காலி மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 26 ஆயிரத்து 939 ஆகும். அதில் இம்முறை பொதுத் தேர்தலில் 6 இலட்சத்து 45 ஆயிரத்து 803 பேரே வாக்களித்துள்ளதுடன் அதில் 35 ஆயிரத்து 751 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 6 இலட்சத்து 10 ஆயிரத்து 52 வாக்குகளே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் வெற்றி கொண்டு தனது ஆதிக்கத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிலைநிறுத்தியுள்ளது. அம்மாவட்டத்தின் தங்காலை, பெலியத்தை, முல்கிரிகல, திஸ்ஸமஹராம ஆகிய தேர்தல் தொகுதிகளை வெற்றி கொண்டுள்ள அந்த கட்சி பெற்றுக் கொண்டுள்ள மொத்த வாக்குகள் 2 இலட்சத்து 80 ஆயிரத்து 881 ஆகும். அது 75.10 சதவீதமாகும். 

ஐக்கிய மக்கள் சக்தி 51 ஆயிரத்து 758 வாக்குகளையும் (13.84 வீதம்), தேசிய மக்கள் சக்தி 31 ஆயிரத்து 362 வாக்குகளையும் (8.39 வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 5 ஆயிரத்து 17 வாக்குகளையும் (1.34 சதவீதம்) பெற்றுக்கொண்டுள்ளன.

அம்பாந்தோட்டை மாவட்டத்தை பொருத்தவரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர் எண்னிக்கை 4 இலட்சத்து 72 ஆயிரத்து 718 ஆகும். அதில் இம்முறை தேர்தலில் 3 இலட்சத்து 92 ஆயிரத்து 988 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதுடன் அதில் 18 ஆயிரத்து 971 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 74 ஆயிரத்து 17 ஆகும்.

ஊவா மாகாணம்

மொனராகலை மாவட்டம்
மொனராகலை மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு மூன்று தேர்தல் தொகுதிகளே உள்ள நிலையில் அம்மூன்று தொகுதிகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றி மாவட்டத்தை வெற்றிக்கொண்டுள்ளது. 

பிபில, வெல்லவாய, மொணராகலை ஆகிய தேர்தல் தொகுதிகள் மூன்றினையும் வெற்றி கொண்டு முழு மாவட்டத்திலும் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அம்மாவட்டத்தில் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 193 வாக்குகளைப் பெற்றுள்ளது. அது, அளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளில் 74.12 வீதமாகும்.

அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி அம்மாவட்டத்தில் 54 ஆயிரத்து 147 வாக்குகளையும் (19.28 வீதம்), தேசிய மக்கள் சக்தி 11 ஆயிரத்து 429 வாக்குகளையும் (4.07 வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 3 ஆயிரத்து 494 வாக்குகளையும் (1.24 வீதம்) பெற்றுக் கொன்டுள்ளன. அதன்படி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அம்மாவட்டத்தில் 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் உரித்தாகியுள்ளன.

இம்முறை பொதுத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தை பொறுத்தவரை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 744 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து ஒராயிரத்து 197 பேர் மட்டுமே வாக்களித்திருந்த நிலையில், அதில் 20 ஆயிரத்து 312 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 80 ஆயிரத்து 885 வாக்குகள் மட்டுமே அம்மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டம்
பதுளை மாவட்டத்தை பொருத்தவரை, 9 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. மஹியங்களை, வியலுவ, பசறை, பதுளை, ஊவா - பரணகம, வெலிமடை, பண்டாரவளை, அப்புத்தளை, ஹாலி எல ஆகிய அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியுள்ளது.

அம்மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3 இலட்சத்து 9 ஆயிரத்து 538 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் அது அளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளில் 62.06 சதவீதமாகும். 

அதற்கு அடுத்தப்டியாக, ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 290 வாக்குகளையும் (28.93 வீதம்), தேசிய மக்கள் சக்தி 19 ஆயிரத்து 308 வாக்குகளையும் (3.87 வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 9 ஆயிரத்து 163 (2.03 வீதம்) வாக்குகளையும் பெற்றுள்ளன.

பதுளை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

பதுளையில் மொத்தமாக 6 இலட்சத்து 25 ஆயிரத்து 294 பேர் வக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 5 இலட்சத்து 37 ஆயிரத்து 416 பேர் மட்டுமே வககளித்திருந்தனர். அதில் 38 ஆயிரத்து 621 வாக்குகள் நிராகரிக்கப்ப்ட்டுள்ளன. 4 இலட்சத்து 98 ஆயிரத்து 795 வாக்குகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாணம்

அனுராதபுரம் மாவட்டம்
அனுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி, ஹொரவபொத்தானை, அநுராதபுரம் - கிழக்கு, அநுராதபுரம் - மேற்கு, கலாவெல, மிஹிந்தலை, கெகிராவ, ஆகிய அனைத்து தேர்தல் பிரிவுகளிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியானது மொத்தமாக 3 இலட்சத்து 44 ஆயிரத்து 458 வாக்குகளை அம்மாவட்டத்தில் 67.95 என்ற சதவீதத்தில் பெற்றுக் கொண்டுள்ளது.

இதற்கு அடுத்தப்டியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 788 வாக்குகளையும் (23.63 சதவீதம்), தேசிய மக்கள் சக்தி 24 ஆயிரத்து 492 வாக்குகளியும் ( 4.83), ஐக்கிய தேசிய கட்சி 8 ஆயிரத்து 254 வாக்குகளையும் (1.63 சத வீதம்) பெற்றுக்கொண்டுள்ளன.

அதன்படி அனுராதபுரத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி இரு ஆசனங்களையும் வெற்றி கொண்டுள்ளன.

அனுராதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 6 இலட்சத்து 37 ஆயிரத்து 176 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் உள்ள நிலையில், இம்முறை தேர்தலில் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 371 பேர் மட்டுமே அங்கு வாக்களித்துள்ளனர். அதில் 35 ஆயிரத்து 469 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 5 இலட்சத்து 6 ஆராயிரத்து 902 வாக்குகளே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி கொண்டுள்ளது. மின்னேரிய, மெதிரிகிரிய, பொலனறுவை, ஆகிய குறித்த மாவட்டத்தின் 3 தேர்தல் தொகுதிகளையும் வெற்றி கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொது ஜனபெரமுன, மொத்தமாக ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 847 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 73.66 சதவீதமாகும். 

இதற்கு அடுத்தப்டியாக அம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆயிரத்து 781 வாக்குகளையும்(19.47 வீதம்), தேசிய மக்கள் சக்தி 6 ஆயிரத்து 792 வாக்குகளையும் (2.77 சதவீதம்), ஐக்கிய தேசிய கட்சி 6 ஆயிரத்து 525 (2.66 சதவீதம்)வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன. அதன்படி பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 4 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 109 ஆகும். அதில் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 539 வாக்குகளே இம்முறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 16 ஆயிரத்து 20 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் 2 இலட்சத்து 45 ஆயிரத்து 519 ஆகும்.

மேல் மாகாணம்

களுத்துறை மாவட்டம் 
களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அனைத்து தேர்தல் தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. பாணந்துறை, பண்டாரகம, ஹொரன, புளத்சிங்கள, மதுகம, களுத்துறை பேருவளை, அகலவத்தை, ஆகிய அம்மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளை வெற்றி கொண்டுள்ள அக்கட்சி, மொத்தமாக 4 இலட்சத்து 48 ஆயிரத்து 699 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது இது 64.08 சதவீதமாகும். 

இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 988 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி 33 ஆயிரத்து 434 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 16 ஆயிரத்து 485 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

அதன்பிரகாரம் களுத்துறையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 ஆசங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

களுத்துறை மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 9 இலட்சத்து 34 ஆயிரத்து 542 ஆகும். அதில் 7 இலட்சத்து 46 ஆயிரத்து 671 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன், அளிக்கப்பட்ட வாக்குகளில் 6415 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி அம்மாவட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்ப்ட்ட மொத்த வாக்குகள் 7 இலட்சத்து 256 ஆகும்.

கொழும்பு மாவட்டம்
கொழும்பு மாவட்டத்தினையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெற்று இம்முறை கைப்பற்றியுள்ளது. அதன்படி கொழும்பின் 15 தேர்தல் தொகுதிகளில் 6 தொகுதிகளை தவிர ஏனையவற்றினை வெற்றி கொண்டுள்ள அக்கட்சி, மாவட்டத்தையும் வெற்றி கொண்டுள்ளது. 6 இலட்சத்து 74 ஆயிரத்து 603 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. அது 57.04 சத வீதமாகும்.

இதற்கு அடுத்தபடியாக வட கொழும்பு, மத்திய கொழும்பு, பொரளை, கொழும்பு மேற்கு, கொழும்பு கிழக்கு, தெஹிவளை ஆகிய தொகுதிகளைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி 3 இலட்சத்து 87 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனைவிட தேசிய மக்கள் சக்தி 67 ஆயிரத்து 600 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 30 ஆயிரத்து 875 வாக்குகளையும் பெற்றுள்ளன.

அதன்படி இம்முறை கொழும்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 12 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 ஆசனங்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளன.

கொழும்பில் மொத்தமாக 17 இலட்சத்து 9 ஆயிரத்து 209 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் உள்ள நிலையில், அதில் 12 இலட்சத்து 63 ஆயிரத்து 810 வாக்குகள் மட்டுமே இம்முறை அளிக்கப்பட்டுள்ளன. அதில் 81 ஆயிரத்து 31 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 11 இலட்சத்து 82 ஆயிரத்து 776 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகும்.

கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றி ஈட்டியுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்தில் அக்கட்சியானது மொத்தமாக 8 இலட்சத்து 7 ஆயிரத்து 896 வாக்குகளைப் பெற்று 13 ஆசங்களை தனதாக்கியுள்ளது. அது 65.76 சத வீதமாகும்.

அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி 2 இலட்சத்து 85 ஆயிரத்து 809 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 61 ஆயிரத்து 833 வாக்குகளையும் பெற்றுள்ளன. அதன்படி அக்கட்சிகளுக்கு முறையே 4, 1 என்ற கணக்கில் ஆசங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கம்பஹா மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு மொத்தமாக 17 இலட்சத்து 31 ஆயிரத்து 866 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் உள்ளன. எனினும் இம்முறை தேர்தலில் அங்கு 13 இலட்சத்து 3 ஆயிரத்து 983 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. அதில் 75 ஆயிரத்து 509 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 12 இலட்சத்து 28 ஆயிரத்து 474 வாக்குகளே அங்கு செல்லுபடியான வாக்குகளாகும்.

வட மேல் மாகாணம்

குருணாகல் மாவட்டம்
குருணாகல் மாவட்டத்திலும் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி கொண்டுள்ளது. அம்மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6 இலட்சத்து 49 ஆயிரத்து 965 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. இது 66.92 சத வீதமாகும். 

ஐக்கிய மக்கள் சக்தி 2 இலட்சத்து 44 ஆயிரத்து 860 வாக்குகளை பெற்றுள்ளது. இது 25.21 சதவீதமாகும். தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகள் 36 ஆயிரத்து 296 ஆகும். இது 3.74 சத வீதமாகும். ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் 26 ஆயிரத்து 770 ஆகும். இது 2.76 சத வீதமாகும்.

அதன்படி குருனாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 11 ஆசங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 4 ஆசங்களையும் வெற்றி கொண்டுள்ளன.

குருணாகல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 13 இலட்சத்து 48 ஆயிரத்து 787 ஆகும். அதில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 11 இலட்சத்து 17 ஆயிரத்து 657 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 46 ஆயிரத்து 414 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி செல்லுபடியான மொத்த வாக்குகள் 9 இலட்சத்து 71 ஆயிரத்து 243 ஆகும்.

புத்தளம் மாவட்டம்
புத்தளம் மாவட்டத்தை பொருத்த வரையில் அதனையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே கைப்பற்றியுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், ஆனமடுவ, சிலாபம், நாத்தாண்டிய, மற்றும் வென்னப்புவ ஆகிய தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி ஈட்டியுள்ளதுடன் அங்கு அக்கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 220,566 (57.26 சத வீதம்) ஆகும். 

அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி 80183 (20.81 சத வீதம்) வாக்குகளையும், முஸ்லிம் தேசிய கூட்டணி 55 981 (14.53 சத வீதம்), தேசிய மக்கள் சக்தி 9944 (2.58 சத வீதம் )வாக்குகளையும் பெற்றுள்ளன.

புத்தளம் மாவட்டத்தை பொருத்தவரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி இரு ஆசனங்களையும், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தினையும் வெற்றிகொண்டுள்ளன.

இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 614370 ஆகும். 414487 வாககுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 385221 வாக்குகள் செல்லுப்படியாகியுள்ள நிலையில் 29266 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாணம்

கேகாலை
கேகாலை மாவட்டத்தினையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி கொண்டுள்ளது. 3 இலட்சத்து 31 ஆயிரத்து 573 வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்று இந்த வெற்றியை சுவைத்துள்ளது. இது 66.29வீதமாகும். 

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தி 317 வாக்குகளை பெற்றுள்ளதுடன் அது 26.25 சத வீதமாகும். இதனைவிட தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகள் 14 ஆயிரத்தி 33 ஆகும். இது 2.81 சத வீதமாகும். ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 12ஆயிரத்தி 168 ஆகும்.

அதன்படி கேகாலை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 7 ஆசங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 6 இலட்சத்து 84 ஆயிரத்தி 189 ஆகும் அதில் இம்முறை 5 இலட்சத்து 24 ஆயிரத்தி 754 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 24 ஆயிரத்தி 547 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அங்கு செல்லுபடியான மொத்த வாக்குகள் 5 இலட்சத்து 207 ஆகும்.

இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்திலும் 8 ஆசனங்களை கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் அக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள் 4 இலட்சத்து 46 ஆயிரத்து 668 ஆகும். இது 68.86 வீதமாகும். 

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 759 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 24.01 வீதமாகும். அக்கட்சி சார்பில் 3 ஆசனங்கள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகள் 17ஆயிரத்தி 611 ஆகும். இது 2.72 வீதமாகும். ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 12 ஆயிரத்தி 349 ஆகும். இது 1.9 வீதமாகும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 8 இலட்சத்து 77 ஆயிரத்தி 582 ஆகும். அதில் இம்முறை தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 6 இலட்சத்து 79 ஆயிரத்தி 103. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 30 ஆயிரத்து 489 ஆகும். அதன்படி அம்மாவட்டத்தில் இம்முறை செல்லுபடியான மொத்த வாக்குகள் 6 இலட்சத்து 48 ஆயிரத்தி 614 ஆகும்.

7. மத்திய மாகாணம்

நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்திலும் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் இம்முறை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி கொண்டுள்ளது. மஸ்கெலியா, ஹங்குரான்கத்தை, கொத்மலை, வலப்பனை, நுவரெலியா ஆகிய தேர்தல் தொகுதிகள் அனைத்தையும் வெற்றி கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, 54.47 எனும் சத வீதத்தில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 389 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

அதற்கு அடுத்த படியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 8 வாக்குகளையும் (31.47 சத வீதம்), சுயேட்சைக் குழு - 1 பதினேழாயிரத்து 107 வாக்குகளையும் (4.04 சத வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 12 ஆயிரத்து 974 (3.07சதவீதம்) பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதன்படி நுவரெலியாவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

நுவரெலியாவில் பதிவு செய்யப்ப்ட்ட மொத்த வாக்குகள் 5 இலட்சத்து 57 ஆயிரத்து 976 ஆகும். அதில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 25 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 42 ஆயிரத்து 48 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 977 ஆகும்.

மாத்தளை
மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, லக்கல, மாத்தளை, மற்றும் ரத்தொட ஆகிய அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 188779 (65.63 சத வீதம்) வாக்குகளை பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 73966 (25.67 சத வீதம் ) வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி 7542 (2.62 சத வீத ) வாக்குகளை பெற்றுள்ளது.

இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 407,567 வாக்குகளில் 312576 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 288073 வாக்குகள் செல்லுபடியாகியுள்ள நிலையில் 24503 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தினையும் இம்முறை பொதுஜன பெரமுன வெற்றி கொண்டுள்ளது. அதன்படி 4 இலட்சத்து 77 ஆயிரத்து 446 வாக்குகளை அக்கட்சியினர் பெற்றுள்ளனர். இது 58.76 வீதமாகும். அதற்கமைய அவர்கள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் 8 ஆகும்.

ஐக்கிய மக்கள் சக்தி 2 இலட்சத்தி 34 ஆயிரத்து 523 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் 4 ஆசங்களை வெற்றி கொண்டுள்ளது. இது 28.86 வீதமாகும்.

சுயாதீன குழுவொன்று 25 ஆயிரத்து 797 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் இது 3.17 சத வீதமாகும். தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகள் 22 ஆயிரத்து 997 ஆகும். ஐக்கிய தேசிய கட்சி 19ஆயிரத்து 12 வாக்குகளை கண்டியில் பெற்றுள்ளது.

கண்டி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 11 இலட்சத்து 29 ஆயிரத்தி 100 ஆகும். அதில் இம்முறை அலிக்கப்ப்ட்டுள்ள மொத்த வாக்குகள் 8 இலட்சத்து 69 ஆயிரத்து 669 ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 57ஆயிரத்தி 91. செல்லுபடியான மொத்த வாக்குகள் 8 இலட்சத்து 12 ஆயிரத்து 578 ஆகும்.

8. கிழக்கு மாகாணம்

திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி திருகோணமலையில் 86394 வாக்குகளை பெற்று முன்னிலையில் 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 68881 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தினையும். இலங்கை தமிழரசு கட்சி 39570 வாக்குளை பெற்று 1 ஆசனத்தையும். கைப்பற்றியுள்ளது.

திருமலை மாவட்டத்தை பொருத்தவரை அங்கு பதிவு செய்யப்ப்ட்ட வாக்குகள் 288,868 ஆகும். அதில் இம்முறை 227117 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 14125 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 212992 மட்டுமே செல்லுபடியகையுள்ளன.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி கொண்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பில் 79460 (26.66 சத வீதம்) வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 67692 (22.71 சத வீதம்) வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34428 (11.55 சத வீதம்) வாக்குகளையும் 1 ஆசனத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 33424 (11.22 சத வீதம்) வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 409808 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் உள்ள நிலையில் அதில் 314850 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 298012 வாக்குகள் செல்லுபடியாகியுள்ள நிலையில் 16838 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

திகாமடுல்லை மாவட்டம் 
திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 126012 (32.65 சத வீதம்) வாக்குகளை பெற்று 3 ஆசனஙகளை கைப்பற்றியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக அம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 102274 (26.5 சத வீதம்) வாக்குகளுடன் 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 (11.22 சத வீதம்) வாக்குகளுடன் ஒரு ஆசனத்தினையும், தேசிய காங்கிரஸ் 38911 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தினையும் வெற்றி கொண்டுள்ளன.

இத்தேர்தல் மாவட்டத்தில் 513979 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் அதில் 402344 பேர் வாக்களித்துள்ளார்கள். அதில் 385997 வாக்குகள் செல்லுப்படியாகியுள்ள நிலையில் 16347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

9. வட மாகாணம்

வன்னி தேர்தல் மாவட்டம்
வட மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி கொண்டுள்ளது. அக்கட்சியானது 69 ஆயிரத்து 916 வாக்குகளை வன்னி மாவட்டத்தில் பெற்ருள்ளது. இது 33.64 சத வீதமாகும். அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 42 ஆயிரத்து 524 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 37 ஆயிரத்து 883 வாக்குகளையும் (18.23 சதவீதம்), ஈ.பி.டி.பி. கட்சியினர் 11 ஆயிரத்து 310 வாக்குகளையும் (5.44 சதவீதம்) பெற்றுக்கொண்டுள்ளனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லை தீவு ஆகிய தேர்தல் தொகுதிகளையும் வன்னி மாவட்ட தபால் மூல வக்களிப்பிலும் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. எனினும் வன்னி மாவட்ட இடம்பெயர்ந்தோர் தொடர்பிலான வக்களிப்பில், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. எவ்வாறாயினும் முழு மாவட்ட ரீதியிலான பார்வையில் வன்னி மாவட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனதாக்கியுள்ளது.

வன்னி மாவட்டத்தை பொருத்தவரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தினையும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 2 இலட்சத்து 68 ஆயிரத்து 34 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், இம்முறை தேர்தலில் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 856 பேர் வாக்களித்துள்ளனர். இதில் 17 ஆயிரத்து 19 வாக்குகள் நிராகரிக்கப்ப்ட்டுள்ளன. வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 837 ஆகும்

யாழ். மாவட்டம்
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 112967 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55303 (15.4 சத வீதம்) வாக்குகளுடன் 1 ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 49373 (13.75சத வீதம்) வாக்குகளுடன் 1 ஆசனத்தையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 45797 (12.75சத வீதம்) வாக்குகளுடன் 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 35927 (10 சத வீதம்) வாக்குகளையும் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

யாழ்பபாணம் தேர்தல் மாவட்டத்தில் 571848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 394136 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளனர். அதில் 359130 வாக்குகள் செல்லுபடியான நிலையில் 35006 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

(எம்.எப்.எம்.பஸீர், ஏ,ஆர்,எம். வஸீம், இராஜதுறை ஹஷான்)

No comments:

Post a Comment