இன்று நள்ளிரவுடன் இராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திரமான தேர்தல் இடம்பெறாது : வைத்திய கலாநிதி சிவமோகன் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 2, 2020

இன்று நள்ளிரவுடன் இராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திரமான தேர்தல் இடம்பெறாது : வைத்திய கலாநிதி சிவமோகன்

இன்று நள்ளிரவுடன் இராணுவத்தினர் ...
இன்று நள்ளிரவு 12 மணியுடன் இராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திரமான தேர்தல் இடம்பெறாது என வைத்திய கலாநிதியும் வன்னி தேர்தல் தொகுதியின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், கோத்தாபாய ராஜபக்ச அவசர அவசரமாக இந்த பாராளுமன்றத்தினை கலைத்துவிட்டு பாராளுமன்ற சட்ட ஆட்சியை உருக்குலைத்தமையினால் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நிலை வந்துவிட்டது. அதுவே ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்.

இந்த தேர்தல் முடிந்த பின்னர் பாராளுமன்றத்தில் பிரச்சனையொன்று வெளிவரவுள்ளது. இதுவரை காலமும் தனது ஜனாதிபதி அதிகாரத்தினை வைத்துக்கொண்டு நடத்தி வந்த அராஜக ஆட்சிக்கு எதிராக பாராளுமன்றம் குரல் கொடுக்கும். இவ்வாறு குரல் கொடுக்கும் போது பாரிய முரண்பாடுகளை அவர் சந்திக்க வேண்டி வரும்.

பாராளுமன்றம் இல்லாத நிலையில் ஜனாதிபதி பல செயலணிகளை உருவாக்கியுள்ளார். குறிப்பாக கிழக்கில் தொல்பொருள் செயலணியை உருவாக்கி தாங்கள் நினைத்ததை நினைத்த இடத்தில் செயற்படுத்துவதற்கு முயற்சித்ததை நாங்கள் காணலாம்.

இன்று நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டங்கள் கூட பாராளுமன்ற சட்டவாக்கத்தினூடாகத்தான் செயற்படுத்தலாம். அந்த முறையை பாராளுமன்றத்தினை கலைத்ததன் மூலம் உருக்குலைத்து விட்டு சகல அதிகாரங்களையும் தான் வைத்துக்கொண்டு நடாத்தப்பட்ட அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் ஆகஸ்ட் 5 ஆக இருக்க வேண்டும்.

இதில் சிங்கள மக்களும் அராஜக விடயங்களை விளங்கிக் கொள்வார்கள் என எண்ணலாம். சிங்கள மக்களும் திருந்திவிட்டதாக நாம் நம்பலாம்.

No comments:

Post a Comment