தேர்தலில் தோல்வியுற்ற எந்த ஒரு நபருக்கும் கட்சியின் தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சக்திமிக்க பயணம் ஒன்று ஆரம்பித்துள்ளதாகவும் இந்த சக்தியே எதிர்வரும் காலத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்க போக்கும் சக்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக வரலாற்றில் குறைந்த காலத்தில் இவ்வளவு மக்கள் சக்தி ஒன்றிணைந்து ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாட்டின் அரசியல் வரலாற்றில் பாரிய அரசியல் புரட்சிக்கு வித்திட்டு 27,71,990 வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த மக்கள் ஆணையுடன் நாட்டின் வரலாற்றில் பாரிய ஜனநாயகப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச கூறினார். சுற்றிவளைத்து கல் எறிந்த போது எம்மால் பலமான பயணமொன்றை ஆரம்பிக்க முடிந்தது. பொய்யை தோல்வியடைச் செய்து உண்மையை எம்மால் வெற்றி பெறச் செய்ய முடிந்தது.
குறுகிய காலத்திற்குள் நாம் இவ்வாறு மக்கள் பலத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம். எனவே, எமக்கு சிறந்த எதிர்காலப் பயணம் உள்ளதாக நான் நினைக்கின்றேன். அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு உறுதியான பயணத்தை தொடரவுள்ளோம்.
மேலும், தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப்பட்டியலில் உள்வாங்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment