(எம்.எப்.எம்.பஸீர்)
நாடளவைய ரீதியில், பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையான 5 இலட்சத்து 33 ஆயிரத்து 883 பேர் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் முன்னெடுத்துள்ள விஷேட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும், அதில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொழும்பில் உள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த தகவல், மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான விஷேட செயலமர்வின் போது வெளிப்படுத்தப்பட்டது.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் அபாயகரமான ஒளதங்கள் கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றின் தகவல்கள் பிரகாரம், கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் போதைப் பொருள் குற்றங்களுக்காக மொத்தமாக 89 ஆயிரத்து 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வருடத்தில் மட்டும் மொத்தமாக 1741.992 கிலோ ஹெரோயினும் 7071.094 கிலோ கஞ்சாவும், 10.840 கிலோ கொக்கைனும் 15.163 கிலோ ஹஷீஸும், 35.446 கிலோ ஐஸ் எனப்படும் மெத்தம்பிட்டமைன் ஆகியவை இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையான 89321 சந்தேக நபர்களில் 45923 பேர் கஞ்சா போதைப் பொருள் தொடர்பிலான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 40970 பேர் ஹெரோயினுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகவும் 2073 பேர் ஐஸ் அல்லது மெதம்பிட்டமைன் போதைப் பொருள் குறித்த குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் கொழும்பு நகரிலேயே அதிக போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள் மற்றும் அது சார்ந்த குற்றங்களில் ஈடுபடுவோர் சிக்கியுள்ளனர். அதன் பிரகாரம் 2019 இல் 15941 பேர் ஹெரோயினுடனும், 13134 பேர் கஞ்சாவுடனும், 27 பேர் கொக்கைனுடனும், 67 பேர் ஹஷீஸுடனும் 1566 பேர் ஐஸ் எனும் போதைப் பொருளுடனும் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment