நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்று (01) சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு, பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
நேற்று (31) நொச்சியாகம, யாலேகம, கல்குளம, சியம்பலேவ, நிட்டுகொல்லேவ மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment