
இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி வைத்தியசாலையில் கடந்த 10ம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் கட்டியை அகற்ற சத்திர சிகிச்சை செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. நுரையீரல் தொற்றை சரி செய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராணுவ வைத்தியசாலை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக, மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.
செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை விரைவாக செயலிழக்க செய்வதுடன், பிற நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment