
கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் நில அதிர்வு தொடர்பாக ஆராய மேலுமொரு குழு, அந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புவியியல் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி 6 பேர் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு அனுப்பபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கண்டி - தலாத்து ஓயாவை அண்மித்த திகண, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு 8.34 மணியளவில் சிறியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த பகுதிகளுக்கு விசேட குழுவினர் சென்றனர். அந்த குழுவின் அறிக்கை நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதிகளில் ஏற்பட்ட அதிர்விற்கு 3 சம்பவங்கள் காரணங்களாக அமையலாம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கற்குவாரியில் வெடி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வு இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லை எனின் சுண்ணாம்பு கற்பாறை உடைந்து வீழ்ந்திருப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விக்டோரியா உள்ளிட்ட அதனை அண்மித்த நீர்த்தேக்கங்களில் ஏற்பட்ட உயர் நீர் அழுத்தம் மூன்றாவது காரணியாக முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment