திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டும் - ஆனந்தசங்கரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 12, 2020

திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டும் - ஆனந்தசங்கரி

தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட கட்சியே என சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூட்டமைப்பு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருட்டுத்தனமான வழியிலேயே உருவாக்கப்பட்டது. அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் பதிவுகூட இல்லை. தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும்.

ஏனெனில் தந்தை செல்வா இறந்து பல வருடங்களின் பின்னரே மாவை சேனாதிராசா அந்தக் கட்சியை பொறுப்பேற்றவர். அதற்கு யாரும் அனுமதி கூட வழங்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச் செல்வன் அனுமதி வழங்கியே மாவை கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு அனைத்தும் திருட்டுத்தனமாகவே நடைபெற்றது. அதனால்தான் கூட்டமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என கோருகின்றேன். மாவை, சம்பந்தன், சுமந்திரன் தவிர்ந்த அனைத்து தரப்புக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைய முன்வர வேண்டும்.

பலமான ஓர் கூட்டினை உருவாக்க வேண்டும். அதற்காகவே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியின் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும் அவர் இன்று வரை முன்வரவில்லை என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment