வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு உட்புற மற்றும் வெளிப்புற விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் - பொலிஸ் தலைமையகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு உட்புற மற்றும் வெளிப்புற விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் - பொலிஸ் தலைமையகம்

பொலிஸ் ஊடகப் பிரிவு மீண்டும் ...
(செ.தேன்மொழி)

வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த தேர்தல் கண்காணிப்பு குழுவின் பணிப்பாளர் அசோக்க தர்தவன்ச, வாக்கு எண்ணும் நிலையங்களின் உற்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும் கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, வாக்களிப்பின் பின்னர் வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவற்றின் பாதுகாப்புக்காக பொலிஸ் நடமாடும் சேவை, வீதிச் சோதனைச் சாவடிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை விசேட பாதுகாப்பு சோதனை நிலையங்களும் வாக்கு எண்ணும் நிலையங்கள் இருக்கும் வீதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்கள் தொடர்பிலும் தகவல்களை சேகரிப்பர். இந்த செயற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொலிஸாரும் ஈடுபடுவர்.

வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களில், ஒருவர் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பிற்காக செல்வதுடன், மற்றைய நபர் பொலிஸ் நிலையத்தில் இருப்பதுடன் அவரின் தேவை ஏற்படின் அவரும் தேர்தல் செயற்பாடுகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்.

வாக்கு கணக்கெடுப்பு நிலையங்கள் 64 இலும் நாளை காலை 7 மணி முதல் வாக்கு எண்ணும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதுடன், வாக்கு எண்ணும் நிலையங்களின் உட்புற பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக இரு நிலையத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் உட்பட 52 பேர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய வாக்கு எண்ணும் நிலையங்களின் உட்புற பாதுகாப்புக்கு மாத்திரம் 3328 பேர் பணியில் ஈடுபடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிரேஸ்ட அதிகாரி உட்பட 735 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வாக்கு எண்ணும் நிலையம் ஒன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 3200 பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வெளிப்புற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய 3069 நடமாடும் சேவைகளும், 153 களகம் அடக்கும் குழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 1263 உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 269 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவை அனைத்தும் 24 மணித்தியாலயமும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களுக்காக அனைத்து ஆலோசனைகளும் தேர்தல் செயற்பாடுகளுக்கு பொறுப்பான பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய தேர்தல் செயற்பாடுகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை, சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 82091 உத்தியோகஸ்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தெரிவு அத்தாட்சி அதிகாரியால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் மாத்திரமே வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் வாக்கு பெட்டிகளை தவிர வேறு எந்த ஆவணங்களையும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. 

தெரிவு அத்தாட்சி அதிகாரியின் ஆலோசனைக்கமைய தேவை ஏற்படின், வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறும் நிலையங்களுக்குள் செல்லும் நபர்களை பரிசோதனை செயற்வதற்கும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போதும் அதற்கு பின்னரும் நாட்டின் அமைதியை பாதுகாப்பதற்காக தொடர்ந்தும் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அதற்கான ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment