ஆடை பெட்டிகளுக்குள் சூட்சுமமாக வைத்து பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட ரூபா 17 மில்லியன் (ரூ. 17,040,000) பெறுமதியான சிகரெட்டுகளை, சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
துபாயிலிருந்து கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி வந்த UL 123 எனும் விமானத்தில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த 12 பெட்டிகள், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் (Air Cargo Village, Katunayake) வைத்து, கடந்த வெள்ளிக்கிழமை (28) சோதனை செய்தபோது, 1,420 கார்ட்டன் சிகரெட் பெட்டிகளில் 284,000 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் உதவி பேச்சாளர், சுங்க அத்தியட்சகர் லால் வீரகோன் தெரிவித்தார்.
குறித்த 12 பெட்டிகளில், தைத்த ஆடைகளுடன் பொதி செய்யப்பட்ட நிலையில் சிகரெட்டுகள் மீட்கப்ப்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவிசாவளை பிரதேச விலாசத்தை கொண்ட, நிறுவனத்தின் பெயரில் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், அவ்வாறான ஒரு நிறுவனம் இல்லை என தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விலாசத்திற்கு, சுங்க அதிகாரிகள் விசாரணைக்காகச் சென்ற நிலையில், அவ்விலாசத்தில் வீடொன்று காணப்பட்டுள்ளதோடு, அங்கிருந்தோரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவ்வாறான ஒரு பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அவர்கள் அறிந்திருக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment