பெய்ரூட்டை ஒரு பேரழிவு நகரமாக அறிவித்து லெபனானில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடி விபத்து நடந்த சில வினாடிகளில் பெய்ரூட் துறைமுகப் பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.
துறைமுகப் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக் கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.
இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப் பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான பெய்ரூட் நகரத்தை ‘பேரழிவு நகரம்’ என லெபனான் அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.
அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் மனல் அப்டில் சமத் நஜீத் பெய்ரூட்டை பேரழிவு நகரமாக அறிவித்துள்ளார் என அரசு செய்தி தொலைக்காட்சி தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசிய அவசரநிலை 2 வாரங்களுக்கு பிறப்பிக்கப்படுவதாகவும், அந்த நாள் தொடர்ந்து நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த சில மணி நேரத்தில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கில் அவுன் தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை அவசர அவசரமாக கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதமரும் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்திற்கு முழுமையான மற்றும் உடனடியான அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும், நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டது.
குறிப்பாக அந்நாட்டின் திரிபோலி மற்றும் டிடோன் நகரங்களில் உள்ள துறைமுகங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மீட்புப்பணி, மருத்துவம், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment