இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு தொழில் வீசா கோரி, அதிகார சபையின் பணிப்பாளரின் கையொப்பத்தை மோசடியாக வைத்து, குடிவரவுத் திணைக்களத்திற்கு பரிந்துரை கடிதங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சபை அறிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் குறித்த நபரை நேற்றையதினம் (22) குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோவை தொடர்புகொண்டு இது தொடர்பில் கேட்டபோது, இரண்டு தொழில் வீசா பரிந்துரைக் கடிதங்கள் குறித்து, குடிவரவு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட விசாரணையில், பணிப்பாளர் ஒருவரின் போலியான கையொப்பம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதுபோன்ற பல முறைகேடுகள் கடந்த காலங்களில் நிகழ்ந்ததாகவும், கடந்த ஜனவரி முதல் நாம் மாற்றங்களைச் செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலாவை இழிவுபடுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை எனவும், இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதால், கோபமுற்றுள்ள சில ஊழியர்களால் தலைமைத்துவத்தை இழிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இவ்விடயம் தொடர்பில் உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, இது தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment