கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 5ம் திகதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கும் என ஜோர்தான் அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான நாடுகளில் சர்வதேச விமான சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்தானிலும் சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 5ம் திகதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் சிவில் விமான ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஹைதம் மிஸ்டோ கூறுகையில் ‘‘ஜோர்தான் மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், பிற நாட்டு மக்கள் ஜோர்தான் வருவதற்கும் இனி எந்த தடையும் இல்லை.
ஜோர்தான் வரும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேபோல் ஜோர்தானில் இருந்து புறப்படும் மக்களும் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே விமானத்தில் அனுமதிக்கப்படுவர்’’ எனக் கூறினார்.
இதனிடையே ஜோர்தானில் நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 1,168 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment