(இராஜதுரை ஹஷான்)
ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் தோல்வி கண்டுள்ள அரசாங்கத்துடன் டீல் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. தனித்து அரசாங்கத்தை கைப்பற்றி சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே புதிய இளம் தலைமுறையினரை களமிறக்கியுள்ளோம். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை எம்மால் மாத்திரமே மீள் கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கலாச்சார நிதியத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் குறிப்பிடப்பட்டுள்ளது கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில் கலாச்சார நிதியத்தில் எவ்வித நிதி மோசடிகளும் இடம் பெறவில்லை.
நிதியத்தை பொறுப்பேற்கும் போது நிலையான வைப்பில் 300 மில்லியன் நிதி காணப்பட்டது. கலாச்சார அலுவல்கள் அமைச்சினை பிறிதொரு தரப்பினருக்கு வழங்கும் போது நிதியத்தின் வைப்பில் 4.5 பில்லியன் நிதி சேமிக்கப்பட்டிருந்தது. மத்திய கலாச்சார நிதியத்திற்கு வருவாயை அதிகரிப்பதற்கும், செலவுகளை குறைப்பதற்கும் முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டன. நிதியத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ சபையின் அனுமதியுடன் அனைத்து தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டன.
சசுனோதய திட்டத்தின் கீழ் குறைந்த வருமானங்களை கொண்ட 1500 விகாரைகளுக்கு குறித்த பிரதேச சபையின் ஊடாக 5 இலட்சம் அபிவிருத்தி நிதி வழங்கப்பட்டது அத்துடன், புராதான குளங்கள் மற்றும் தொல்பொருள் மரபுரிமைகள் ஆகியற்றை பாதுகாப்பதறகும், அதனூடாக பயன் பெறுவதற்கும் சர்வதேச தரத்திலான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.
ஆகவே எனது பொறுப்பில் இருந்தபோது, நிதியத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை. என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும். பிற்பட்ட காலததில் குறித்த அமைச்சு பதவி வகித்தவர் தொடர்பான அனுமானங்களையும் குறிப்பிட முடியாது. தேர்தல் இடம்பெறவுள்ள காலத்தில் அனைத்து செயற்பாடுகளும் ஒரு தரப்பினருக்கு சாதகமாகவும், பிறிதொரு தரப்பினருக்கு பாதகமாகவும் காணப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எதிரான சதிகளை ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டணியமைத்து முன்னெடுப்பதாக சஜித் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் அனைத்து மட்டத்திலும் தோல்வி கண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பலவீனமான அரசாங்கத்துடன் டீல் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றார்.
No comments:
Post a Comment