(ஆர்.யசி)
கொவிட்-19 வைரஸ் நெருக்கடி நிலையில் இலங்கையின் செயற்பாடுகளை முன்னெடுக்க உலக நாடுகளின் மூலமாகவும், சர்வதேச அமைப்புகள் மூலமாகும் வழங்கப்பட்ட மொத்த நிதித் தொகை 252 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 காரணமாக உலக நாடுகளின் மூலமாகும், சர்வதேச நிறுவனங்கள் மூலமாகவும் 252 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளது. ஆனால் முழுத் தொகை டொலர்களில் கிடைக்கவில்லை. காரணம் சில நிதி சேவையை பெற்றுக் கொண்ட பின்னர் வழங்கப்படும்.
எவ்வாறு இருப்பினும் இந்த தொகையில் கடன் மூலமாக 173.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், நிவாரணம் மூலமாக 75 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மற்றும் 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெருமதியான பொருட்கள் மற்றும் சேவையாக கிடைக்கப் பெற்றுள்ளது.
இது குறித்த முழுமையான அறிக்கையை நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் உலக வங்கியினால் இலங்கையில் ஏற்பட்ட கொவிட்-19 இன் உடனடித் தேவைக்காக பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்திற்காக 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment