மன நலம் பாதிக்கப்பட்ட தாரிக் தாக்கப்பட்ட சம்பவம் : போதைப்பொருள் பயன்படுத்தியவர் என்ற சந்தேகம், பொலிஸார் தேவையான அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தகவல் - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

மன நலம் பாதிக்கப்பட்ட தாரிக் தாக்கப்பட்ட சம்பவம் : போதைப்பொருள் பயன்படுத்தியவர் என்ற சந்தேகம், பொலிஸார் தேவையான அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தகவல்

அளுத்கம - தர்கா நகர், அம்பகஹ சந்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணில் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கடமையாற்றிய பொலிஸாரால் 14 வயது மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய சி.சி.ரி.வி. காணொளிகள் சமூக வலைத்தலங்களில் பரவி, 'ஜஸ்டிஸ் போர் தாரிக்' எனும் 'ஹேஷ் டக்' இன் கீழ் நீதி கோரப்பட்டு வரும் நிலையில், அச்சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு டப்ளியூ.ஏ.சி.ஏ.பி.பீ. எனப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பொலிஸ் அத்தியட்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் இந்த விசாரணைகளை கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சரின் கீழ் ஆரம்பகட்ட விசாரணை ஒன்று ஏற்கனவே நடாத்தப்பட்டுள்ள நிலையில், அதில் குறித்த சிறுவன் விடயத்தில் பொலிஸார் கூடுதல் பலப் பிரயோகம் செய்யவில்லை எனவும் தேவையான பலப் பிரயோகத்தினையே செய்துள்ளதாகவும், அப்போதும் அச்சிறுவன் மன நலம் பாதிக்கப்பட்டவன் என பொலிஸார் அறிந்திருக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த பின்னணியிலேயே இது குறித்து விஷேட விசாரணைகளை முன்னெடுக்க பதில் பொலிஸ் மா அதிபர் கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக பொலிஸ் அத்தியட்சருக்கு பணித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதன்போது கடமையில் இருந்த பொலிஸார் கடமை தவறினரா என ஆராய களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் திணைக்கள மட்ட விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க டப்ளியூ.ஏ.சி.ஏ.பி.பீ. எனப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பொலிஸ் அத்தியட்சகருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பனித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் பிரகாரம், குறித்த சம்பவமானது கடந்த மே 25ஆம் திகதி அளுத்கம பொலிஸ் பிரிவில், மாலை 4.45 மணியளவில், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள அம்பகஹ சந்தியிலுள்ள வீதிச் சோதனைச் சாவடியில், துவிச்சக்கர வண்டியில் முகக் கவசம் இன்றி வந்த ஒருவரை, நிறுத்துமாறு பொலிஸாரால் சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது.

அவர் பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து வெலிபன்ன திசையில் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் குறித்த வீதிச் சோதனைச் சாவடியின் ஊடாக தர்கா நகர் நோக்கிச் செல்ல முற்பட்டபோது, ​​அவரை நிறுத்துவதற்காக அவரது துவிச்சக்கர வண்டியை இழுத்துப் பிடித்து அவரை நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையில், அவர் கட்டுப்பாட்டை இழந்து, வீதியருகே இருந்த மீன் பெட்டியொன்றின் மீது வீழ்ந்துள்ளார்.

இதன்போது, குறித்த நபர், சத்தமாக கத்தியவாறு அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், பொலிஸார் அவரைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு நபர், குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், துவிச்சக்கர வண்டியில் வந்தவரின் தந்தை தர்கா நகர், சென்ட்ரல் வீதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, பொலிஸார் குறித்த நபரின் தந்தையை வீதிச் சோதனைச் சாவடிக்கு அழைத்து, துவிச்சக்கர வண்டியில் வந்தவரை அளுத்கம பொலிஸ நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். துவிச்சக்கர வண்டியில் வந்தவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவு நிலையில் தன்னிடம் எதுவும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக, அவரது தந்தை பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் தந்தையிடமிருந்து ஒரு வாக்குமூலத்தை பெற்ற பின்னர் குறித்த சிறுவனை தந்தையிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரினால் ஆரம்பத்தில் இந்நபர், மன வளர்ச்சி குறைவானவர் என அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, போதைப்பொருள் பயன்படுத்தி நபர் என சந்தேகம் ஏற்பட்டிருந்தது. ஆயினும் தந்தையின் வாக்குமூலத்தை அடுத்து, குறித்த சிறுவனை தடுத்து வைக்க அல்லது நீதிமன்ற நடவடிக்கை எடுக்காமல் குறித்த சிறுவனை தந்தையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொலிஸாரினால் துவிச்சக்கர வண்டியில் வந்தவரைக் கட்டுப்படுத்த தேவையான பலம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, அவரைத் தாக்கியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வெளிநபர்களால் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பல்வேறு பிரசாரங்கள் பரப்பப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் கடமையை மீறி செயற்பட்டுள்ளதா என விசாரிக்க களுத்தறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் களுத்துறை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் மேற்பார்வையில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறுவனின் தந்தையிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயது சிறுவனை, களுத்துறை நாகொட மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் மனநல வைத்திய அதிகாரி ஆகியோரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டள்ளதோடு, இதுவரை அது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படவில்லை.

அத்துடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, கொழும்பு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ், குறித்த பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment