கொரோனா சட்டதிட்டங்களை ஒரு குடும்பமோ, அதிகாரத்தில் உள்ள எவருமோ மீற முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

Add+Banner

Monday, June 1, 2020

demo-image

கொரோனா சட்டதிட்டங்களை ஒரு குடும்பமோ, அதிகாரத்தில் உள்ள எவருமோ மீற முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர்

maxresdefault+%25281%2529
(ஆர்.யசி)

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது. ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீற முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில் சுகாதார பணிப்பகத்தின் செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும். இப்போது வரையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களிடம் மட்டுமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.

அதற்கும் அப்பால் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவர்களில் அதிகளவில் நோய் கண்டறியப்பட்டு வருகின்றது.

குவைத்தில் இருந்து வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனினும் வைரஸ் சமூக பரவலாக மாறாத வகையில் நாம் செயலாற்றி வருகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விருப்பம் தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இப்போது வரையில் 123 நாடுகளில் இருந்து 42 ஆயிரத்து 522 பேர் தாம் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களிலும் அதிகளவானவர்கள் பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுகிய கால வீசா கொண்டவர்களும் உள்ளனர். எனினும் இவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்னரே இலங்கைக்கு வர முடியும் என்ற புதிய நிபந்தனைகள் இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைக்குள் கொவிட்-19 தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த நாம் எவ்வளவு முயற்சிகளை எடுத்தும் ஒரு சிலர் அவற்றை மீறி செயற்பட்டு வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு வெறுமனே எமக்கோ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ள கடமை அல்ல. நாட்டிலுள்ள அனைவருக்கும் இதில் பொறுப்புடன் செயற்படும் கட்டாயம் உள்ளது. 

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது. ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீற முடியாது. அவ்வாறு மீறுவதனால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றது என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *