மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை நான்கு ஆசனங்களை வென்றெடுக்கும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார்.
வாழைச்சேனை பேத்தாழையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று (29) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் தமிழர்களின் உரிமை தொடர்பான பிரச்சினை எழுந்த போது, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்கவே தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆயுத ரீதியான போராட்டத்தால் பெற முடியாததை, ஜனநாயக அரசியலால் பெற முடியும் என்பதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையாலே நானும் அரசியலில் களமிறங்கியுள்ளேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ள மக்கள் பலத்தின் அடிப்படையில் இம்முறை மூன்று ஆசனங்களை வெல்ல முடியும். எனினும் தமிழர்களின் அரசியல் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை தமிழர்கள் உணர்ந்துள்ளதால் நான்கு ஆசனங்களைப் பெறுமளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமடைந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று கட்சிகளை ஒருங்கமைத்து உருவாக்கப்பட்ட கட்சியாகும். இதன் தலைமைகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் ஏற்பட்டால் புதிய அரசி்யலமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும் எமது கட்சி தயாராகவுள்ளது என்றார்.
(கல்குடா நிருபர்)
No comments:
Post a Comment