முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிகையலகரிப்பாளர்கள் போன்ற தொழில்களை மேற்கொண்டு வருகின்றவர்களுக்கும் 5000 ரூபாய் உதவித் தொகையை வழங்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தின்போதே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா ரைவஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியில் இருந்து நாடளாவிய ரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் உள்ளூராட்சி மன்றங்களினால் உள்வாங்கப்படாத முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களுடைய வருமானத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களைப் போன்று வருமானத்தை இழந்துள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிகையலகரிப்பாளர்கள் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அரசாங்கம் 5000 ரூபாய் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பரிந்துரைந்தார்.
ஏற்கனவே, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய அசாதாரண சூழலில் சமுர்த்தி பயனார்களுக்கு உதவித் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிந்த நிலையில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளார்.
மேலும், வாடகை குடியிருப்பாளர் மற்றம் வாடகை கட்டிடங்களில் வர்த்தக நடவடிக்கையில் மேற்கொண்டிருப்போர் தொடர்பில் தன்னுடைய அவதானத்தை செலுத்திய அமைச்சர், வீடு மற்றும் கட்டிட உரிமையாளர்கள் பலர் வாடகை வருமானத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றமையையும் சுட்டிக் காட்டியதுடன், தற்போதைய அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு வாடகை அறவிடுதல் செலுத்துதல் விடயத்தில் இருதரப்பும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்ற விடயத்தை அமைச்சரவை தீர்மானமாக வெளியிடுவதற்கும் அமைச்சரவையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment