விசேட நன்றிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரிவித்தார் பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Monday, May 4, 2020

விசேட நன்றிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரிவித்தார் பிரதமர் மஹிந்த

(ஆர்.யசி) 

தேசிய அனர்த்தமொன்றாக கருதப்படும் கொவிட்-19 தொற்று நோய் பரவலில் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் மக்கள் குறித்து சிந்திக்கவில்லை. எனினும் எமது அழைப்பை ஏற்று தமிழ் மக்கள் சார்பில் கலந்துகொண்ட ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு விசேட நன்றிகளை தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

பிரதான எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறிவந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் எவையும் கலந்துகொள்ளப் போவதில்லை என அவர்கள் அறிவித்திருந்தனர். 

மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலேயே இந்த அழைப்பை நிராகரித்த நிலையில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேசிய மக்கள் சக்தி கட்சியும் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என்ற காரணத்தை கூறியிருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி பிரதமரின் அழைப்பை ஏற்பதாக கூறியிருந்த நிலையிலும் இறுதி நேரத்தில் அவர்களின் முடிவினை மாற்றிக் கொண்டனர். 

இந்நிலையில் இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டதுடன் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரசினைகள் குறித்து பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பிடம் காரணிகளை கூறியிருந்தனர். 

தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் அவர்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகள், வாழ்வாதாரமின்றி மக்கள் படும் துன்பங்கள் என்பவற்றை அவர்கள் பிரதமரிடம் எடுத்துக் கூறியதுடன் தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கி அதில் சகல மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். 

இந்நிலையில் சகல காரணிகளையும் செவிமடுத்த பிரதமர் மற்றும் அரச தரப்பினர் தேசிய பிரச்சினை ஒன்றினை இப்போது நாடே எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழர்களின் பிரச்சினைகளை முன்வைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வந்தமைக்காகவும், சகல எதிர்க்கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்து அவர்களின் சுயநல அரசியலை முன்னெடுக்கும் வேளையிலும் மக்களின் நிலைமையை உணர்ந்து இந்த கூட்டத்தில் கலந்துகொண்டமைக்கான விசேட நன்றிகளை தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைபின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான சகல உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment