ரணில் அழைக்கும் போதெல்லாம் அலரி மாளிகையில் கூடிப் பேசியவர்கள் முக்கிய பிரச்சினை குறித்து ஆராயும்போது புறக்கணிக்கின்றனர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 4, 2020

ரணில் அழைக்கும் போதெல்லாம் அலரி மாளிகையில் கூடிப் பேசியவர்கள் முக்கிய பிரச்சினை குறித்து ஆராயும்போது புறக்கணிக்கின்றனர்

(ஆர்.யசி) 

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அழைக்கும் போதெல்லாம் அலரி மாளிகையில் கூடிப் பேசிய மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சஜித் தரப்பினர் நாட்டில் மிக முக்கியமான பிரச்சினை குறித்து ஆராயும் வேளைகளில் அதனை புறக்கணிப்பதன் மூலமாக அவர்களின் அரசியல் கொள்கை என்ன என்பது தெளிவாக வெளிப்பட்டுவிட்டது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

பிரதான எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறிவந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் எவையும் கலந்துகொள்ளப் போவதில்லை என அவர்கள் அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே  அமைச்சர் பந்துல குணவர்தன அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது கருத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கான உதவிகளை வழங்க அரசாங்கம் சகல தரப்பின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையிலும் இவர்கள் அனைவரும் மக்கள் குறித்து சிறிதும் கருத்தில் கொள்ளாது தமது பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பது வேதனைக்குரிய விடயமாகவே நாம் கருதுகின்றோம். 

அதுமட்டும் அல்லாது இவர்கள் அலரி மாளிகை கலந்துரையாடலை புறக்கணித்துள்ளதன் மூலமாக இவர்களின் ஒரே நோக்கம் பாராளுமன்றத்தை கூட்டுவதும் அதன் மூலமாக நாட்டில் அரசியல் குழப்பம் ஒன்றினை ஏற்படுத்துவது என்பதும் தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. 

மக்கள் பிரச்சினையை பேசி அனைவரும் இணைந்து தீர்மானம் ஒன்றினை எடுப்போம் என்பதுவும், நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படும் என்றால் அதனை பேசி ஒதுக்கீடுகளை செய்துகொள்ள முடியும் என்பதனை கருத்தில் கொண்டே அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். 

ஆனால் எதிர்க்கட்சியினர் அதற்கு இணக்கம் தெரிவிக்காது, பாராளுமன்றத்தை கூட்டுங்கள் என்ற காரணியை மட்டுமே கூறி வருகின்றனர். என்றால் உண்மையில் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க இவர்கள் நினைக்கவில்லை என்பதே உண்மையென வெளிப்பட்டுவிட்டது. 

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களும் நிலைமையை உணர்ந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அலரிமாளிகை கலந்துரையாடலில் கலந்துகொண்டமைக்கான விசேட நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment