(எம்.நியூட்டன்)
ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்தாக அமையும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றிக்காகத்தான் இத்தகைய கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது தனி சிங்கள வாக்குகளை குறி வைத்து செயற்பாட்டார். பௌத்த சிங்கள இனவாதத்தையே கக்கினார். அத்தகைய வாக்குகளைப் பெற்றே வெற்றியும் பெற்றார்.
வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. அத்தகைய நிலையில்தான் பாராளுமன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு தீவிரவாத பேரினவாதத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அவரின் உரை அமைந்துள்ளது.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பொறுப்புக்கூறலை கனேடிய பிரதமர் முதல் கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் வரை வலியுறுத்தி வரும் நிலையில் அதனை உதாசீனம் செய்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச அமைப்புக்கள் நிறுவனங்களிலிருந்தும் வெளியேறுவோம் என்று அவர் விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கைக்குத்தான் அது ஆபத்தாகும் கொரோனா நிலையில் இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளையும் அது பாதிக்கும் பொருளாதார ரீதியில் நாடு ஏற்கனவே பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்படியான சூழலில் இலங்கை சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறுவது இலங்கைக்குத்தான் ஆபத்தாகும்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் இனப்பிரச்சினைக்கு நியயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்பை இலங்கை அரசு உதாசீனம் செய்யும் போது சர்வதேச சமூகத்தை தமிழர்கள் பற்றிப்பிடிக்க வேண்டும் எமது மண்ணில் நாங்கள் ஆளும் நிலைமையை உருவாக்குவதற்கு சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு இது பொருத்தமான தருணம் எமது நியாயப்பாடுகளை சர்வதேசம் மீண்டும் ஒருமுறை உணர்ந்துகொள்வதற்கு இது வாய்ப்பாக அமையும் என்றார்.
No comments:
Post a Comment