வைத்தியர்களாகி எம்மைப் போலுள்ளவர்களுக்கு உதவுவதே நோக்கம் - யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் O/L பரீட்சையில் சாதனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

வைத்தியர்களாகி எம்மைப் போலுள்ளவர்களுக்கு உதவுவதே நோக்கம் - யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் O/L பரீட்சையில் சாதனை

யுத்தத்தின் வடுக்களை தன்னகத்தே தாங்கி வாழ்ந்து வருகின்ற மாணவர்கள் கல்வியில் சாதிப்பது தொடர்ச்சியாக நடந்து வருகின்ற ஒன்றே அந்த வகையில் குறிப்பாக முள்ளம்தண்டுவடம் பாதிக்கபட்ட 2 மாணவிகள் தற்போது வெளியாகிய 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சாதனைகளை நிலைநாட்டி உள்ளனர்.

தம்மாலும் கல்வியில் சாதிக்க முடியும் என்ற நிலையை ஏனையவர்களுக்கு புகட்டும் முகமாகவும் மாற்று வலு உடையவர் என்பவர்கள் யார் என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள் முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகளான கெங்காதரன் பவதாரணி மற்றும் மதியழகன் விதுர்சிகா ஆகியோர்.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட குறித்த இரு மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கெங்காதரன் பவதாரணி கடந்த 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் தன்னுடைய தந்தையாரை பறிகொடுத்து அந்த எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த நிலையில் சக்கர நாற்காலியின் உதவியுடன் நடமாடி வருகிறார்.
தன்னுடைய ஆறு வயதில் தனது தந்தையாரை பறிகொடுத்த குறித்த சிறுமி தன்னுடைய கல்வியை திறம்பட முன்னெடுத்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி 8A 1B சித்திகளை பெற்று தனது பாடசாலைக்கும் தனது சமூகத்திற்கும் முன்னுதாரணமாக விளங்குவதோடு மாற்றுத்திறனாளிகளான தங்களாலும் சாதிக்க முடியும் என்பதையும் மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் யார் என்பதையும் நிரூபித்து இருக்கிறார்.

அதேபோன்று மதியழகன் விதுர்சிகா நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து மக்கள் வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் சென்று அங்கு 2009 புரட்டாதி மாதம் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மதியழகன் விதுர்சிகா முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் நடமாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

மீள்குடியேற்றம் வந்து முள்ளியவளை முதலாம் வட்டாரம் பகுதியில் குடியேறிய போதும் முதலாமாண்டு கல்வியை கற்பதற்கு உரிய காலத்தை கடந்த நிலையில் இரண்டாம் ஆண்டிலிருந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த குறித்த மாணவி கடந்த வருடம் இடம்பெற்ற கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6A 1B 2C சித்தி அடைந்துள்ளார்.

இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் வைத்தியர்களாக வருகை தந்து தங்களைப் போன்றவர்களுக்கான வைத்திய சேவைகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களுடைய எதிர்கால இலட்சியம் என தெரிவிக்கின்றனர்.

எஸ். தவசீலன், கே. குமணன்

No comments:

Post a Comment