பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் தென் கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தை அண்டிய பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் கழியோடை ஆற்றில் அதிகளவிலான முதலைகள் பெருகி வருகின்றது.
இப்பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதுடன், மக்களின் நடமாட்டமின்மையினால் வீதியோரங்களில் நடமாடித்திரிகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சுமார் 9, 5, 4 அடி நீளமுடைய அதிக முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.
மேலும், தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கை ஆரம்பமாகியுள்ளதனால், வயல் நிலங்கள், கால்வாய்களை அண்டிய பகுதியில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளுக்கு இரைக்குள்ளாகின்றது.
தற்போது இப்பகுதியில் இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன், முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கைப் பலகைகள் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் மக்கள் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியமுள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்திலெடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இதேவேளை, யானைக்கூட்டமொன்றும் திடீரென காரைதீவு, மாவடிப்பள்ளி எல்லையில் சுதந்திரமாக நடமாடித்திரிகின்றது.
சுமார் 35 க்கும் அதிகளவான யானைகள் இன்று செவ்வாய்க்கிழமை (14) மாலை அப்பகுதியில் இடத்தில் கூடி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வனவிலங்கு அதிகாரிகள் குறித்த யானைகளை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இப்பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை உண்ணுவதற்காக தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதுடன், அருகிலுள்ள பொது மக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment