சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 14, 2020

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

பாறுக் ஷிஹான்

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. 

கடந்த வெள்ளிக்கிழமை (10) கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனைப் பகுதிக்கு கடமைக்குச் சென்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சிலர் இணைந்து தாக்கியதுடன் தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிலையில், கல்முனை குற்றத்தடுப்புப் பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தலைமைறைவாகியிருந்த இரு சந்தேக நபர்களையும் நேற்று திங்கட்கிழமை (13) கைது செய்ததுடன், இன்று (14) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை (7 நாட்கள்) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த உத்தியோகத்தர் சிலரால் கல்முனைக்குடி 02, 04ம் பிரிவுகளில் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது தாக்கப்பட்டு சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், குறித்த உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இருவர் பாழடைந்த மண்டபமொன்றில் மறைந்திருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை (13) மதியம் பொலிஸார் கைது செய்ததுடன், கைதானவர்கள் கல்முனை பகுதியைச் சேர்ந்த 30, 45 வயது மதிக்கத்தக்கவர்களாவர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியிலுள்ள தனது பிரிவு மக்களுக்கு வழங்கும் கடமையில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வேளையில், சில நபர்கள் கூட்டமாக வந்து உத்தியோகத்தரிடம் தங்களுக்கும் கொடுப்பனவு வழங்குமாறு கேட்டு அச்சுறுத்தியதுடன், தகாத வார்த்தைப் பிரயோகங்களால் ஏசியுள்ளனர். இதன் போது குறித்த உத்தியோகத்தர் அந்நபர்களின் கேள்விகளுக்கான பதிலை வழங்கி விட்டு திரும்பும் போது குறித்த நபர்கள் அவரைத்தாக்கியுள்ளனர்.

குறித்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை, தாக்குதலுக்குள்ளான குறித்த உத்தியோகத்தரை அம்பாறை மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் கடந்த சனிக்கிழமை (11) சாய்ந்தமருது வைத்தியசாலைக்குச்சென்று பார்வையிட்டார். மேலும், உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்யுமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபரூடாக பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் இதன் போது தெரிவித்திருந்தார். மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் எம்.எம்.வஹாப் உள்ளிட்ட சங்கப்பிரதிநிதிகள் தாக்குதலுக்குள்ளான உத்தியோகத்தரை சாய்ந்மருது வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டனர்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து சங்கப்பிரதிநிதிகள் தொலைபேசியூடாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி திலகரியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி திலகரி குறித்த உத்தியோகத்தரிடம் நடந்த சம்பவத்தை தொலைபேசியூடாகக் கேட்டறிந்து கொண்டதுடன், இது குறித்த பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்து கடுமையான நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment