கொழும்பு எமக்கு நல்ல படிப்பினை, யாழில் சமூகத் தொற்று இல்லையென கூற முடியாது - வைத்தியர் காண்டீபன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

கொழும்பு எமக்கு நல்ல படிப்பினை, யாழில் சமூகத் தொற்று இல்லையென கூற முடியாது - வைத்தியர் காண்டீபன்

(தி.சோபிதன்) 

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் குறிப்பிடுகையில், “யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகரினாலேயே குறித்த கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கொரோனா தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் வடக்கு சுகாதார அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்தக் கருத்தினை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளன.

கொழும்பில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஏற்பட்டுள்ள தொற்றுகள் அனைத்தும் நோய் அறிகுறி இல்லாது ஏற்பட்ட தொற்றாகவே நாம் பார்க்கின்றோம். எனினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் இன்றுவரை 360 பேர் வரை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளோம்.

இந்தப் பரிசோதனையானது மூன்று, நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் வரை யாரும் யாழ்ப்பாணத்தில் சமூகத்தொற்று இன்னும் ஏற்படவில்லை என்பதைக் கூறமுடியாது. எனவே நாங்கள் வடக்கிலுள்ள சுகாதாரத் திணைக்களத்தினரிடம் கோரிக்கை முன்வைக்க விரும்புகின்றோம்.

யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதபோதகருடன் தொடர்புபட்ட நபர்களுக்கே கொரோனா பரிசோதனையை இன்றுவரை மேற்கொண்டுள்ளோம். ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் பரிசோதனையை மேற்கொண்டுவிட்டு நாம் சமூகத்தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது.

எனினும் யாழ்ப்பாணத்தைப் பொருத்தவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் நிறையவே உள்ளார்கள். அவர்கள் தொடர்பாக நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக உள்ளது. எனவே வடக்கில் கொரோனா பரிசோதனையை இரண்டு, மூன்று மடங்காக அதிகரித்து அந்த பரிசோதனை முடிவின் பின்னரே நாம் சமூகத்தொற்று உள்ளதா, இல்லையா என்பதைப் பரிசீலிக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment