ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வாள் வெட்டுக்கு இலக்காகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (29) மாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்தோர், பிரதேச சபை உறுப்பினர் மீது சரமாரியாக வாள் வெட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு நேற்றிரவு (புதன்கிழமை) 7.15 மணியளவில் சென்ற மூவர் கொண்ட குழுவினரே வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மறவன்புலவு வட்டார பிரதேச சபை உறுப்பினரான அரியகுட்டி நிமலரூபன் என்பவரே சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மறவம்புலவு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த உறுப்பினர் உரையாற்றிய பின்னணியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த வாள் வெட்டுக்கு இலக்கான நபர் மறவன்புலவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
(யாழ்ப்பாணம் நிருபர்)
No comments:
Post a Comment