மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை, மக்கள் பீதியடையத் தேவையில்லை - மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை, மக்கள் பீதியடையத் தேவையில்லை - மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வருகின்ற நிலையில் இலங்கையில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லையென இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சம்மேளனம், மருந்து இறக்குமதியாளர்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்து வகைகளை இருப்பில் வைத்திருப்பதுடன், சில சமயங்களில் அதற்கும் அதிகமான காலங்களுக்கு தேவையான மருந்துகளை வைத்திருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பீதி காரணமாக மருந்துகளை வாங்குவது தேவையற்ற விடயமாகும். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் (SLCPI) தலைவி திருமதி கஸ்தூரி செல்லராஜா கூறுகையில், “தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கும் போது விவேகமானவர்களாகவும், நியாயமானவர்களாகவும் இருக்க வேண்டும், அதற்குப் பதிலாக பீதியடையக் கூடாது” என தெரிவித்துள்ளார். 

“அத்துடன் மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்து வகைகள் தற்போது கைவசம் உள்ளது, மேலும் விநியோக சங்கிலியின் நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை மக்கள் வாங்குகிறார்கள் என்று சில்லறை மருந்தக விற்பனையாளர்களிடமிருந்து பல தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்தே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

“நாங்கள் இது குறித்து பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் மேலும் இவ்வாறான பயமுறுத்தல்கள் காரணமாக சமூகத்தில் தற்போது நிறைய பேர் பகுத்தறிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார். 

திருமதி. கஸ்தூரி செல்லராஜா மேலும் குறிப்பிடுகையில், “இலங்கை ஒரு சிறிய சந்தை மற்றும் உலகெங்கிலும் உள்ள பன்னாட்டு மருந்து உற்பத்தியாளர்களுடன் எங்களது சம்மேளன உறுப்பினர்களுக்கு சிறந்த உறவுகள் உள்ளன. நாம் மருந்துகளை கைவசமில்லாமல் இயக்கமாட்டோம் என்பதை இது உறுதி செய்கிறது.” 

சேமிப்பகம் குறித்த அறிவு இன்றியமையாதது என குறிப்பிட்ட அவர் அதிக மருந்துகளை வீட்டிலேயே சரியாக சேமிக்கத் தவறும் பட்சத்தில், அது மருந்தின் செயல்திறனைப் பாதிக்கும் என்றும் அவர் நுகர்வோரை எச்சரித்துள்ளார். 

உதாரணமாக, மருந்தை பொதி செய்து வைத்திருக்கும் பெட்டிகள் உற்பத்தியை ஒளியிலிருந்து பாதுகாக்கின்றன. சில நேரங்களில் பொருட்களின் பொதிகளில் வைக்கப்படும் டெசிகண்ட் துகல், ஈரப்பதனிலிருந்து உற்பத்தியை பாதுகாக்க பயன்படுகின்றன.” என அவர் விரிவாகக் கூறினார். 

SLCPI அதன் மருந்து இறக்குமதியாளர்களின் உறுப்பினர்கள் தங்கள் விநியோக சங்கிலிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அதனால் எந்தவித இடையூறும் ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். 

மருந்துப் பொருட்களுக்கான மூப்பொருட்களில் 60 வீதமானவை சீனாவில் தயாரிக்கப்படுகின்ற போதிலும் ஐரோப்பாவே மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது. மேலும் இலங்கைக்கு அதிக இறக்குமதிகள் இந்தியாவிலிருந்து வந்தாலும் இந்தியா தனது மூலப் பொருட்களுக்காக சீனாவையே தங்கியுள்ளது. எனவே இலங்கையில் மருந்துக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

வீரகேசரி

No comments:

Post a Comment