அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் பணியாற்றிவந்த அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் கீழ் வேலை செய்துவந்துள்ளார்.
இதையடுத்து, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனால் துணை ஜனாதிபதிக்கும் அவரது மனைவி ஹரென் பென்சுக்கும் இன்று வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையின் முடிவில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி ஹரென் பென்ஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதியின் செய்தித்தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனையின் முடிவில் டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment