சிறு, நடுத்தர கைத்தொழிலாளர்கள் நெருக்கடி நிலைமையினை அறிவிக்க தொலைபேசி சேவை - முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

சிறு, நடுத்தர கைத்தொழிலாளர்கள் நெருக்கடி நிலைமையினை அறிவிக்க தொலைபேசி சேவை - முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கது

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையினை கைத்தொழில் அமைச்சுக்கு அறிவிக்க அவசர தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்மொழிகளிலும் சேவையினை கைத்தொழிலாளர்கள் துரிமதாக பெற்றுக் கொள்ள முடியும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

மருத்துவ கண்காணிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஈடுப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சினையின் பாரதூரதன்மையினை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். முறையற்ற விதத்தில் செயற்பட்டால் அரசாங்கமும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்டார். 

கைத்தொழில் அமைச்சில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பெரும்பலானோர் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி கைத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். கைத்தொழில்களுக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்தே அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

மேலதிக தேவைகளுக்காக பிற நாடுகளிலும் இருந்து மூலப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரும்பாலான நாடுகள் தங்களின் நாடுகளில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகளை இடை நிறுத்தம் செய்துள்ளது. இதன் காரணமாக உள்ளுர் உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

மூலப் பொருளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள உள்ளுர் கைத்தொழிலாளர்கள் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். ஆகவே இவர்களின் நலன் கருதி அரசாங்கம் விசேட திட்டங்களை செயற்படுத்தியுள்ளது. 

இதற்காக 011 3144416 என்ற தொலைபேசி சேவை அறிமுகம் செய்யபட்டுள்ளது. இத்தொலைப்பேசி சேவை ஊடாக கைத்தொழிலாளர்கள் மும்மொழியிலும் சேவையினை பெற்றுக் கொள்ள முடியும். சேகரிக்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். 

கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து தற்போது மருத்துவ கண்காணிப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலரது செயற்பாடுகள் வெறுக்கத்தக்கது. 

தேசிய பிரச்சினையினை கருத்திற் கொண்டு இவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாடு திரும்பியவுடன் இவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பாமல் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஏன் உட்படுத்துகின்றோம் என்ற காரணத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும். 

நெருக்கடியான நிலையில் மருத்துவ கண்காணிப்பு நவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் குளிருட்டப்பட்ட அறைகள் மற்றும் இதர வசதிகளை கோருவது பொறுத்தமற்றதாகும். இராணுவத்தினரது பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்ட மெத்தைகளை இராணுவத் தளபதி இவர்களின் பாவனைகளுக்காக எவ்வித கோரிக்கைகளுமின்றி தன்னிச்சையாகவே வழங்கியுள்ளார். 

பிற நாடுகளில் இவ்வாறான செயற்பாடுளை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் எவரும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்ல, இலங்கை பிரஜைகள் ஆகவே பொறுப்புடன் அனைத்து மக்களின் பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வீரகேசரி

No comments:

Post a Comment