(நா.தனுஜா)
சார்க் நாடுகளின் கொவிட் - 19 ஐ தோற்கடிப்பதற்கான நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக முழு உலகுமே பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் இச்சவாலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான வீடியோ மாநாடொன்று கடந்த 15 ஆம் திகதி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்றது.
அதன்போது பிராந்தியம் என்ற வகையில் இச்சவாலுக்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதற்கான நிதியைத் திரட்டிக் கொள்வதற்கும் தலைவர்களுக்கிடையில் இணக்கம் காணப்பட்டது.
அதன்படி குறித்த நிதியத்திற்காக இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்வருமாறு டுவிட்டர் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
'சார்க் நாடுகளின் கொவிட் - 19 ஐ எதிர்கொள்வதற்கான அவசர நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான வைரஸ் தொற்றை எதிர்கொண்டு இல்லாதொழிப்பதில் எமக்கு இடையிலான ஒத்துழைப்பு வலுவாகத் தொடரும்'.
அதேவேளை இந்நிதியத்திற்காக ஆப்கானிஸ்தான் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பங்களாதேஷ் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment