பட்டதாரிகளுக்கான நியமனத்தை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் என தெரிந்தே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

பட்டதாரிகளுக்கான நியமனத்தை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் என தெரிந்தே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றி இருக்கின்றது. நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் என தெரிந்தே அரசாங்கம் பாராளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் நியமனக் கடிதங்களை அனுப்பிருந்தது. அரசாங்கம் வாக்குறுதியளித்த காலத்துக்குள் நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல் ஆணையாளர் இடைநிறுத்தியிருக்கமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் இல்லத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அத்துடன் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் அனைத்து பட்டதாரிகளையும் மூன்று மாதத்துக்குள் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்குவேன் 

ஆட்சியமைத்து ஒரு மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளை அரச துறையில் உள்வாங்கி, மூன்று மாதத்துக்குள் நிரந்தர நியமனம் வழங்குவேன் என ஜனாதிபதி தேர்தலின்போது நான் வாக்குறுதியளித்திருந்தேன்.

ஆனால் எனது எதிர்வாதி, பட்டதாரிகளை ஒரு மாதத்துக்குள் இணைத்துக் கொள்வதாக வாக்குறுதியளித்தார். ஜனவரியில் நியமனம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பெப்ரவரியில் வழங்குவதாக தெரிவித்தனர். இறுதியில் பாராளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சிலருக்கு அவசரமாக நியமனக் கடிதங்களை தபாலில் அனுப்பியிருக்கின்றது.

மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நியமனங்கள் வழங்குவது, இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும். அதனடிப்படையிலே பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்குவதை தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் இடை நிறுத்தி இருக்கின்றார்.

அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதியை அரசாங்கம் ஏற்கனவே அறிந்திருந்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் என தெரிந்துகொண்டே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் 44 ஆயிரம் பட்டதாரிகளையும் ஏமாற்றி இருக்கின்றது.

அத்துடன் பட்டதாரிகளுக்கான நியமனத்தை இடைநிறுத்த நானே செயற்பட்டதாக அரசாங்கம் பொய்ப் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment