(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கொரோனா வைரஸ் மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட சுமார் 5000 இற்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவ்வாறு வந்தவர்களில் மேல் மாகாணம், புத்தளம், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருக்கின்றனர். எனவே இப்பிரதேசங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
அத்தோடு கொரோனா வைரஸ் சீனாவிலேயே உருவானது. இவ்வாறிருக்கையில் இலங்கையில் அவதான மட்டத்திலுள்ள நாடுகள் பட்டியலிலிருந்து சீனா நீக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
கொரோனா வைரஸ் மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த 5000 பேரில் சீனர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.
கிராம சேவகர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவல்களுக்கு ஏற்ப இம்மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டுக்கு வருகை தந்த 2572 பேர் அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
No comments:
Post a Comment