பழீல் ஹாஜியாரின் 35 வருட அரசியல் வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசுதான் தேசியப் பட்டியல் - முன்னாள் நகர பிதாவும், அரச ஹஜ் குழுத் தலைவருமான மர்ஜான் பழீல் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

பழீல் ஹாஜியாரின் 35 வருட அரசியல் வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசுதான் தேசியப் பட்டியல் - முன்னாள் நகர பிதாவும், அரச ஹஜ் குழுத் தலைவருமான மர்ஜான் பழீல் தெரிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் பேருவளை நகர பிதாவும், அரச ஹஜ் குழுத் தலைவருமான மர்ஜான் பழீலுக்கு, தேசியப் பட்டியலில் இடம் ஒதுக்கிக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்மானம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ் ஆகியோரினால் எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல், மர்ஜான் பழீலுக்கு (14) சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மர்ஜான் பழீலின் இல்லத்தில் (14) ஒன்று திரண்டு, அவருக்கு தமது முழு அளவிலான ஆதரவுகளையும் உளம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தங்களது பூரண ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்குவதாகவும் இதன்போது குறிப்பிட்டனர்.

இங்கு ஆதரவாளர்கள் மத்தியில் மர்ஜான் பழீல் கருத்துத் தெரிவிக்கும்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ் ஆகியோரிடத்தில் எவ்வித இனவாதங்களுக்கும் இல்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இவர்களை இனவாதக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு இது சிறந்த உதாரணமாகும்.

பழீல் ஹாஜியாரின் 35 வருட அரசியல் வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசு என, இதனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எனது தந்தை பழீல் ஹாஜியார், தனது அரசியல் வாழ்க்கையில் ஆழ்ந்த சிந்தனையாளராகத் திகழ்ந்தார். ஒரு நொடிப்பொழுதேனும் பிசகாமல், கட்சி மாறாமல் இறுதி வரை செயற்பட்டார். அனைவருடனும் எல்லா சந்தர்ப்பத்திலும் தோழோடு தோழ் நின்று செயற்பட்டவர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் குடும்பத்தினருடன் அவருடைய இறுதி மூச்சு வரை நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் நடந்துகொண்டவர்.

இதனால்தான், அந்த நன்றி உணர்வை மறவாமல், இவ்வாறானதொரு சிறப்புக் கைங்கரியத்தை மேற்கொள்ளத் தீர்மானித்து, அவர்கள் என்னையும் எனது கட்சி ஆதரவாளர்களையும் கெளரவித்துள்ளனர். இதற்கு நான் எனது பேருவளை தொகுதி வாழ் மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சார்பாக இவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஐ.ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment