கொவிட்-19 கொடிய வைரஸிலிருந்து ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான மகத்தான பொறுப்பை ஜனாதிபதி மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்கின்றார் - வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

கொவிட்-19 கொடிய வைரஸிலிருந்து ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான மகத்தான பொறுப்பை ஜனாதிபதி மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்கின்றார் - வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்

எமது நாடு மட்டுமன்றி முழு உலகையும் கவலையில் ஆழ்த்தி கொவிட்-19 எனும் கொடிய தொற்று நோய் பலரின் உயிரைக் காவுகொண்டு, முழு உலகிற்கும் பாராதூரமான தீங்கினை விளைவித்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கொடிய பேரழிவொன்று தலைதூக்கியுள்ள சந்தர்ப்பத்தில் அக்கொடிய வைரஸிலிருந்து ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும், இலங்கை மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான மகத்தான பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அது தொடர்பாக வடமேல் மாகாண ஆளுநர் என்ற வகையில் எனது மனமார்ந்த நன்றிகளை வடமேல் மாகாண மக்கள் சார்பாக அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடமேல் மாகாண மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் நகர பிதாக்கள், பிரதேச சபை தலைவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், வடமேல் மாகாண பிரதான செயலாளர், மாவட்ட செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் இத்தகைய அர்ப்பணிப்பானது எவ்வாறானதென்றால், உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் என்ற தரவுறுதி பெற்ற நாடுகளால்கூட நிறைவேற்ற முடியாத இந்தப் பயங்கரமான தொற்று நோயிலிருந்து எமது நாட்டினையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாப்பதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதில் தற்போது அவர் வெற்றியடைந்துள்ளார். 

அந்த வெற்றியானது எத்தகையது என்றால் இந்தக் கொடிய தொற்று நோயினை வெற்றி கரமாகக் கட்டுப்படுத்திய ஐந்து நாடுகளில் ஒன்றாக எமது இந்தச் சிறிய தாய் நாடானது தற்போது உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டுள்ளமையானது எமக்குக் கிடைத்த விசேட வெற்றியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் இந்தப் பாரிய போராட்டத்திற்கு வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த எங்களது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். 

இதற்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றி சிரமமான காலத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறு நான் முழு வடமேல் மாகாண மக்களிடமும் மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 
இக்கொடிய வைரஸிற்கு நாம் வசிக்கும் வடமேல் மாகாணத்திலும் ஒரு பகுதி இரையாகியுள்ளமை தொடர்பாக உங்களது விசேட கவனத்தைச் செலுத்தியாகவே வேண்டும். வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த நாமும் இந்தப் பயங்கரமான வைரஸிற்கு இரையாகியுள்ளமையை நினைவுபடுத்துகின்றேன்.

தலைதுதூக்கியுள்ள இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு வடமேல் மாகாண மக்கள் எவ்விதப் பிரச்சினைகளுமின்றி தமது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பற்றாக்குறைகளின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் செய்முறையொன்றினை நான் தயார்படுத்தியுள்ளேன். 

அவ்வாறே வடமேல் மகாண மக்களுக்கு சிறந்த சுகாதார நிலைமையொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, வடமேல் மாகாண சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து விசேட கொவிட்-19 தடுப்புச் செயற்றிட்டமொன்றையும் நான் ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்துடன் அத்தியவசிய பணிகளை நிறைவேற்ற வேண்டி ஏற்பட்டால், அவற்றை நிறைவேற்றிக் கொள்வது தொடர்பாக நான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கும் தயாராகவுள்ளேன்.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரச் சட்டதிட்டங்களை அவ்வாறே பின்பற்றித் தாமும் தமது குடும்பமும், அயலவரும் பாதுகாக்கப்படும் விதத்தில் செயற்படுமாறும் நான் வடமேல் மாகாண மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். 

அதுபோன்றே, வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் இருப்பார்களாயின் அது பற்றிய தகவல்களை மறைக்காது சுகாதார அலுவலர்களிடம் வெளிப்படுத்தி தனிமைப்படுத்தலுக்கு நடவடிக்கை எடுத்து இப்பேரழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவித்துக் கொள்வதற்கு ஒத்துழைக்குமாறும் தயவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

இந்த கொடிய அச்சுறுத்தலிலிருந்து வடமேல் மாகாணத்தைக் காப்பாற்றி, உங்களுக்கு சிறந்த, ஆரோக்கியமான இடமாக வடமேல் மாகாணத்தை உருவாக்குவதனையே நான் இவையெல்லாவற்றிலிருந்தும் எதிர்பார்க்கின்றேன். இதற்காக, வடமேல் மாகாணத்தில் உள்ள உங்கள் அனைவரையும், நாட்டையும் தேசத்தையும் கொடிய கொரோனாப் பேரழிவிலிருந்து விடுவித்து ஒன்றிணைக்கவும், பலப்படுத்தவும் சாதி மத, குல, அரசியல் பேதமின்றிக் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!

No comments:

Post a Comment