சர்வதேச சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளுக்கு அமைய, இலங்கையிலுள்ள பிரத்தியேக விமானங்கள் (charter flights) மூலம் தற்போது நாட்டில் எஞ்சியுள்ள சுற்றுலாப் பயணிகளை அனுப்பி வைக்கப்படும் என, சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய (25) நிலவரப்படி, சுமார் 18,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக, குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெளி விவகார அமைச்சு மற்றும் அந்தந்த நாட்டுக்கான தூதரகங்கள் மற்றும் உயர்ஸதானிகராலயங்களுடன் தொடர்புகொண்டு, தேவையான வசதிகளை ஏற்பாடு செய்து வருவதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு பயணிகள் நுழைவது இடைநிறுத்தப்பட்டபோதிலும் அனைத்து வெளிச்செல்லும் விமான சேவைகளும் இடம்பெற்று வருகின்றன. தினமும் இங்கிலாந்து, மெல்பேர்ன், நரிட்டா ஆகிய நாடுகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இயங்கி வருகின்றன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது, எந்தவொரு நாட்டவரையும் விடுமுறை நாட்களிலோ அல்லது வேலை நாட்களிலோ இங்கு வரவேற்பதோடு, கோரிக்கைகளின் அடிப்படையில் பிரத்தியேக விமானங்கள் (charter flights) வழியாக தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்திற்கு செல்வதற்கு உதவுமாறு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை வழங்குநர்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்வதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளும், சாரதிகளும் ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக விமான டிக்கெட்டைப் பயன்படுத்தலாம் என, பதில் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளதால், குறித்த நடைமுறையைப் பின்பற்றுமாறும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
விமான நிலையத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதி கிடைக்காதவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை அல்லது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 1912 எனும் 24 மணி நேர அவசர தொலைபேசியை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment