ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியையும் அவர் மனைவியையும் கைது செய்ய உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியையும் அவர் மனைவியையும் கைது செய்ய உத்தரவு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சிஐடி பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனம் இடையேயான பரிவர்த்தனையில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் குறித்த இருவரையும் சந்தேகநபர்களாக பெயரிட்டு, பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த இருவர் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கவனத்திற்கொண்டு சட்டமா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நிதித்தூய்தாக்கல் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களின் பேரில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தில் விடயங்களைத் தௌிவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் கைது செய்வதற்கான உத்தரவை, CID யிற்கு வழங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற சர்வதேச விசாரணைகளுக்கமைய, எயார்பஸ் நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு இலஞ்சம் வழங்கியமை அம்பலமானதோடு, இது தொடர்பில் அந்நிறுவனத்திற்கு 4 பில்லியன் டொலர் அபராதம் விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதன் மூலம், இலங்கை, ஜப்பான், ரஷ்யா, சீனா, நேபாளம், மலேசியா, தாய்வான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான மூன்றாம் தரப்பு தரகர்கள் மூலம் இலஞ்சத்தை வழங்கி, தமது விமானங்களையும் செய்மதிகளையும் கொள்வனவு செய்வதற்கு எயார்பஸ் நிறுவனம் முறையற்ற வகையில் ஏற்பாடு செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதில், ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறைவேற்று அதிகாரியின் மனைவியின் பெயருக்கு, புரூணை பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் 2 மில்லியன் டொலர் பணம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்துமாறு நேற்றையதினம் (02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

No comments:

Post a Comment