மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாத்தின் போது எவ்வாறு இந்த மோசடி இடம்பெற்றது என்பது தொடர்பான விபரங்களை ஆதாரத்துடன் வெளியிடவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இந்த மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு கட்சி பேதமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதமாகும் போது இன்னமும் விலையை அதிகரிக்கும் நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் மேற்கொள்ளும்.
ஏனெனில் எதிர்வரும் மாத்தில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலரகள் கடனை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயினும் எவ்வாறு செலுத்துவது என்ற திட்டமின்றி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இந்த கடனை செலுத்த வேண்டுமாயின் இன்னுமொரு கடனை பெற்றே செலுத்த வேண்டும், அல்லது நாட்டின் வளங்களை விற்பனை செய்ய வேண்டும் அல்லது கடனை பெற்ற நாட்டிடம் சலுகைக்காலத்தை கேட்க வேண்டும். இதில் எந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளப்போகின்றது என்ற தெளிவுபடுத்தல் அவசியமானதாகும். இதில் மூன்று வழிமுறைகளையும் அரசாங்கம் செயற்படுத்த போகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.
அண்மையில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். ஆயினும் அவருடைய விஜயத்தை பார்க்கிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியாவிற்கான விஜயம் பெரிய பேசு பொருளாக மாறியது.
ஏனெனில் இந்திய விஜயத்தின் போது பிரதமர் எமது நாட்டினால் கடனை மீள செலுத்த இயலாத நிலைமை காணப்படுகின்றது. ஆகவே சலுகை காலத்தை நீடிக்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். இந்த விடயம் உலக நாடுகளின் மத்தியில் எமது நாட்டிற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயலாகும். இதன் ஊடாக ஏனைய நாடுகளும் எமது நாட்டுடனான கொடுக்கல் வாங்கல்களில் பின்வாங்கும் நிலைமை ஏற்படும்.
கடன் சுமை அதிகரித்தமையின் காரணமாகவே, அரச ஊழியர்களுக்கு வழங்குவதாக கூறிய சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியவற்றை அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை என்றார்.
No comments:
Post a Comment