(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பொலிஸ் பாதுகாப்பிலிருந்த ஆடு ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
போயர் ஜமுனா பாரி எனும் கலப்பினத்தைக் கொண்ட கூடுதல் பால் தரக்கூடிய, விலையுயர்ந்த குறித்த ஆட்டை அதன் உரிமையாளர் மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் ஆடுகளை வளர்த்து வந்த நபரின் பண்ணையிலிருந்த குறித்த ஆடு திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட ஆடு தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆட்டின் உரிமையாளர் ஆட்டை தேடும் பணியில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வந்தார்.
சில இடங்களில் களவாடப்பட்டு பொலிஸாரால் கைப்பட்டப்பட்ட ஆடுகள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொண்டால் ஆட்டின் உரிமையாளர் ஆட்டினை அடையாளம் கண்டு கொள்வதற்காக பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று ஏமாற்றத்துடன் வந்துள்ளார்.
களவாடப்பட்ட ஆட்டை உரிமையாளர் ஆறு மாதங்களின் பின்னர் கண்டுபிடித்துள்ளார். ஆட்டை வைத்திருந்தவரிடம் விசாரணை செய்த போது அதை கொண்டு வந்து விற்பனை செய்த நபரை காண்பித்துள்ளார்.
குறித்த ஆட்டை களவாடிய நபர் நாப்பதாயிரம் ரூபாக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
களவாடிய நபருக்கு எதிராக வாழைச்சேனை நீதிவான் நீதி மன்றில் வழக்கு தொடரப்பட்டு வந்ததோடு ஆடு பொலிஸ் பாதுகாப்பில் இருந்து வந்தது.
சுமார் இரண்டு வருடங்களாக வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில் ஆடு வெள்ளிக்கிழமை (31) இறந்துள்ளதாக பொலிஸார் ஆட்டின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக உரிமையாளர் கவலையோடு தெரிவித்தார்.
(படத்தில் உள்ளது பொலிஸ் பாதுகாப்பிலிருந்து இறந்த ஆடு)
No comments:
Post a Comment