தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. கூட்டணியாக களமிறங்கி பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றுவோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டன் கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தின் மைதானம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக இன்று 27 தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்த தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் நாம் வெற்றி பெற்றோம். எமது மக்கள் உணர்வுப்பூர்வமாக வாக்களித்தார்கள். எனவே, பொதுத் தேர்தலிலும் சஜித் தலைமையில் அம்மாவட்டத்தில் எமது வெற்றி நடை தொடரும்.
புதிய அரசாங்கம் பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் அரசாங்கத்தின் மூகமூடி கலைந்துள்ளது.
சாய்ந்தமருது நகரச பையை உருவாக்குவதற்கு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுவிட்டு, அதனை மீளப்பெற்றனர். எனவே, ஆயிரம் ரூபாவுக்கும் இந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.
ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம்தான் உறுதியளித்தது. அந்த உறுதி மொழி நிறைவேற்றப்பட வேண்டும். கம்பனிகளை காரணம் காட்டிக்கொண்டு இருக்க முடியாது. அடிப்படை சம்பளமாக அல்லாது, மொத்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கினார் அதனை மக்கள் திருப்தியுடன் ஏற்கமாட்டார்கள்.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை. நேற்று கூட நாங்கள் மூவரும் கூட்டாகவே பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே வேட்பாளர்களை விபரத்தை அறிவிப்போம்.
அதேவேளை, கினிகத்தேனை மத்திய கல்லூரிக்கான மைதானத்தை புனரமைப்பதற்கு ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இன்று பணிகள் நிறைவடைந்துள்ளன.
இவ்வாறு மலையகத்தில் தோட்டப்புறங்கள் மற்றும் நகரப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு கோடி கணக்கில் ஒதுக்கினேன். மலையகத்திலுள்ள சில அரசியல்வாதிகள் தற்போது அவற்றை முன்னெடுப்பதற்கு அனுமதிக்காமல், தடுத்து நிறுத்துகின்றனர். இது வெட்கக்கேடான செயலாகும்.
சில தமிழ் பாடசாலைகளின் அதிபர்களும் அரசியல் ரீதியில் செயற்படுகின்றனர். இதனால் அபிவிருத்தி தடைபட்டுள்ளது. எனவே, அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மலையக நிருபர் கிரிஷாந்தன்
No comments:
Post a Comment