அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தின் ஊடாக நாட்டில் மக்களாட்சியை உருவாக்கினோம், தற்போதைய அரசாங்கம் அதனை இல்லாதொழிக்கும் வகையில் செயற்படுகிறது - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தின் ஊடாக நாட்டில் மக்களாட்சியை உருவாக்கினோம், தற்போதைய அரசாங்கம் அதனை இல்லாதொழிக்கும் வகையில் செயற்படுகிறது

(ஆர்.விதுஷா) 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தின் ஊடாக நாட்டில் மக்களாட்சியை உருவாக்கியிருந்தோம். எனினும் தற்போதைய அரசாங்கம் அதனை இல்லாதொழிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. அத்துடன் மக்களுக்கான நிவாரணங்களையும் இல்லாதொழித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த கால அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் மீளவும் இடம்பெற ஆரம்பித்துள்ளன. 

அத்துடன், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் வாயிலாக எமது அரசாங்கம் பெற்றுக் கொடுத்த சுயாதீன தன்மையை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. சுயாதீனத் தன்மையை இல்லாதொழிப்பதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். 

எமது ஆட்சிக் காலத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள உயர்வை இந்த அரசாங்கம் இரத்து செய்துள்ளதுடன், ஓய்வூதிய அதிகரிப்பை இல்லாதொழித்துள்ளது. அத்துடன், பொருட்களின் விலை மூன்று மடங்கினால் அதிகரித்துள்ளது இதன் காரணமாக மக்களுடைய வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கர்ப்பிணி தாய்மாருக்கான போசனை உணவுத்திட்டத்தை இரத்து செய்துள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்கான சீறுடைக்கான வவுச்சரின் பெறுமதியையும் குறைத்துள்ளது. 

விவசாயிகளுக்கு வழங்குவதாக கூறிய உரமானியத்தையேனும் இந்த அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை. அதேவேளை, பணம் செலுத்தியேனும் உரத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

உலக சந்தையில் எரிபொருள் விலை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. இருப்பினும் அதன் பலாபலன்களை இந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. 

எமது ஆட்சிக் காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பை மையமாக கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். முக்கியமாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வாறாக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தது. இந்நிலையில் மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த சங்கங்கள் எதற்காக மௌனம் காக்கின்றன.

No comments:

Post a Comment