தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை உரிய முறையில் பயன்படுத்துவது தொடர்பாக தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். உரிய முறையில் தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளும் என்று பெருந்தோட்டத் துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
தேயிலை உற்பத்தி கடந்த காலங்களில் வெகுவாக குறைவடைந்துள்ளது. இதேபோன்று தேயிலை மீள் உற்பத்தியும் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் தேயிலை உற்பத்தி துறையில் காணப்படுகின்றது.
பெருந்தோட்ட துறையில் உர மானியமும் தேயிலை உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா போன்ற நாடுகளில் ஒரு ஏக்கர் தேயிலை உற்பத்தியில் 700 கிலோ தேயிலை கொழுந்து அறுவடை செய்யப்படுகின்றது இலங்கையில் 300-350 கிலோ கிராம் மாத்திரமே அறுவடையாக பெறப்படுகின்றது.
ஆனால் இலங்கையை பொறுத்த வரையில் தேயிலை உற்பத்தி அறுவடையை அதிகரிக்க இலங்கையில் கூடுதலான சந்தர்ப்பம் உண்டு. இந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்கு நாம் தற்பொழுது திட்டம் வகுத்துள்ளோம்.
கம்பனிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் தேயிலை உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பல ஏக்கர் காணி தரிசு நிலங்களாக காணப்படுகின்றது. இது நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினையாக காணப்படுகின்றது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காணப்படும். தேசிய தேயிலை உற்பத்திக்கு சிறிய தோட்டங்களே 70 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றது. ஆனால் முன்னர் பெருந்தோட்டங்கள் இதற்கு பாரிய பங்களிப்பு செய்தன.
தரிசு நிலங்கள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அது தொடர்பில் உரிய தீர்மானம் மேற்கொள்வார் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment