கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான முழு நம்பிக்கையும், இயலுமையும் சீனாவிற்கு இருக்கிறது என்று இன்று வெள்ளிக்கிழமை பீஜிங்கில் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா ஷீன்ஜிங் தெரிவித்தார்.
உலகலாவிய சுகாதார நெருக்கடி நிலையாக கொரோனா வைரஸ் தொற்றை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்த பிறகு பெய்ஜிங்கில் ஊடக அறிக்கையொன்றை ஹுவா வெளியிட்டார்.
அதில் அவர் 'கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து மக்களின் சுகாதாரத்தின் மீதான உயர்ந்த பொறுப்புணர்வுடன் சீன அரசாங்கம் விரிவானதும், கடுமையானதுமான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சுகாதார ஒழுங்கு விதிகளின் தேவைகளையும் விட மேம்பட்டவையாக அமைந்திருக்கின்றன.
வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான ஆற்றலும், நம்பிக்கையும் சீனாவிற்கு இருக்கிறது' என்று தெரிவித்திருப்பதாக சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார நெருக்கடி நிலையாக கொரோனா வைரஸ் தொற்றை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியிருப்பது இத்தகைய அனர்த்தங்களின் போது அது வழமையாகக் கடைப்பிடிக்கின்ற நடவடிக்கையாகும் என்று கூறினார் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான சீன நிலையத்தின் பிரதம தொற்று நோய்க்கட்டுப்பாட்டு நிபுணர் வூ சுன்யூ.
சீனாவின் தற்போதைய கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் கண்டிப்பானவையும், பயன்தருபவையுமாகும். இந்த வைரஸ் தொற்றை வீரார்ந்த முறையில் கட்டுப்படுத்தி இறுதியில் எம்மால் வெல்ல முடியும் என்று முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment