கொரோனா வைரஸ் தொற்று நோயை உலகலாவிய சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்திருக்கின்ற போதிலும், சீனா மீது பயண, வாணிபக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதை ஒத்துக்கொள்ள அது மறுத்திருக்கிறது.
அவ்வாறான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கு உலக நாடுகளினால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்க்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் வியாழனன்று இரவு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நெருக்கடி நிலை கமிட்டியின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் பேசிய அதன் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அதானொம் கேப்றிஜீசஸ்,
கொரோனா வைரஸ் தொற்று சர்வதேசத்தின் கவலைக்குரிய பொதுச் சுகாதார நெருக்கடியாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்டார். சர்வதேச சுகாதார ஒழுங்கு விதிகளின் கீழ் சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார நெருக்கடி என்று குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் சுகாதார அனர்த்தங்களைப் பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் ரெட்றோஸுக்கு இருக்கிறது.
2007 ஆம் ஆண்டில் இந்த சர்வதேச சுகாதார ஒழுங்கு விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு பெருவாரியான சந்தர்ப்பங்களில் சுகாதார ஸ்தாபனம் உலகலாவிய சுகாதார நெருக்கடி நிலைகளைப் பிரகடனம் செய்திருக்கிறது.
சீனாவிற்குப் பாராட்டு வைரஸ்
தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேரடியாகக் கண்காணிப்பதாக ஜெனீவாவில் குறிப்பிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், வைரஸ் தொற்றை சீனா கண்டுபிடித்த வேகம், வைரஸை கட்டுப்படுத்துவதில் காட்டிய துரிதம், நோயின் குணங்குறிகளை உலக சுகாதார ஸ்தாபனத்துடனும் உலக நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வதில் காட்டிய உத்வேகம் சொற்களால் வர்ணிக்க முடியாதளவிற்கு பிரமிக்கத்தக்கவையாக இருக்கின்றன.
இந்த வைரஸ் தொற்று தொடர்பிலான நெருக்கடியில் ஒழிவுமறைவற்ற முறையில் சீனா பற்றுறுதியை வெளிக்காட்டுகிறது. ஏனைய நாடுகளுடனும் ஒத்துழைத்து செயற்படுகிறது என்று குறிப்பிட்டார்.
தொற்று நோய் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் சீனா பல வழிகளில் புதிய தராதரங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. தனது சொந்த மக்களின் உயிர் மற்றும் சுகாதார நலன்கள் மீது மாத்திரமல்ல, உலகலாவிய ரீதியில் தொற்றைத் தடுப்பதற்கு உறுதியான ஆதரவை வழங்குவதிலும் சீனாவிடமுள்ள உயர்ந்த பொறுப்புணர்வை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.
No comments:
Post a Comment