விசர் நாய்க் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் தொடர் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கோப்பாய் மத்தி கோப்பாயைச் சேர்ந்த அன்ரனி மாலதி (வயது40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில் வசித்து வரும் குறித்த குடும்ப பெண்ணிற்கு இரண்டு மாதத்திற்கு முன்னர் விசர் நாய் கடித்துள்ளது அவ்வாறு கடித்த நாயை அயலவர்கள் அடித்து கொன்றுல்லனர்.
விசர் நாய்க் கடிக்கு உள்ளான குறித்த பெண் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் மருந்து எடுத்ததுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே சென்று தடுப்பு ஊசி போட்டுள்ளார். அங்கு வைத்தியசாலையில் மிகுதியாக இரண்டு ஊசிகள் போட வேண்டும் என்று கூறி திகதியும் குறிப்பிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் ஊசி போட பயம் அடைந்த நிலையில் தடுப்பூசி போடாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு வைத்தியர்களிடம் தனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு விசர் நாய் கடித்ததாகவும் மிகுதி தடுப்பூசி போடப்பட வேண்டிய போதிலும் தாம் அதனை பயத்தில் போடவில்லை என்றும் கூறியுள்ளார்.
உடனடியாக அவருக்கு அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment