பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில் அப்பொறிமுறையை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தெரியாமல் அரசாங்கம் திண்டாடி வருகின்றது. தெளிவான கொள்கையோ, தூரநோக்கு சிந்தனையோ இந்த அரசாங்கத்திடம் கிடையாது என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.
ஆயிரம் ரூபா தொடர்பில் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு காலத்தை இழுத்தடித்து, தொழிலாளர்களை ஏமாற்றாமல் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான தெளிவான பொறிமுறை என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேலும் கூறியவை வருமாறு, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1500 ரூபா வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் அறிவித்திருந்தோம். அதற்கான பொறிமுறை என்னவென்றும் தெளிவாக எடுத்துரைத்தோம்.
எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்ற உறுதி மொழியை வழங்கியிருந்தார்.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேதனமாக ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்திருந்தார். ஆனால் அது எவ்வாறு சாத்தியப்படும் என்பது பற்றி அவர் உரிய தெளிவுபடுத்தல்களை முன்வைக்கவில்லை.
இருந்தும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என்பதுபோல் ஆளும் கட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் பிரமாண்ட அறிவிப்புகளை விடுத்ததுடன், இதோ மலையகத்தின் மீட்பார் வந்துவிட்டார் என்றெல்லாம் தூதிபாடினர்.
எனினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வாறு சம்பள உயர்வை வழங்குவது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது. மறுபுறத்தில் கம்பனிகளும் கைவிரிக்கும் போக்கிலேயே கருத்துரைத்து வருகின்றன.
கம்பனிகளுக்கு வரிச்சலுகை மற்றும் நிவாரணங்களை வழங்குவதன் ஊடாக ஆயிரம் ரூபா இலக்கை எட்டலாம் என ஆரம்பத்தில் கூறிய பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஆயிரத்துக்கு மேல் வருமானம் பெறுவது பற்றிய வழிமுறையை ஆராய வேண்டும் என தற்போது அறிவிப்பு விடுக்கின்றார்.
அதுமட்டுமல்ல தேயிலை சபை இருக்கின்றது. இதன்மூலம் ஆயிரத்துக்கான ஏற்பாடு நடைபெறும் என வீராப்பு பேசிய கோமாளி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஆயிரம் ரூபா வழங்குவதை தடுக்க எதிர்க் கட்சிகள் சதி செய்வதாக தற்போது பொறுப்பற்ற விதத்தில் கருத்து வெளியிட்டுவருகின்றார். ஆயிரத்துக்கு பின்னால் சர்வதேச சதி இருக்கின்றது என்று மட்டும்தான் இன்னும் கூறவில்லை. அந்த அறிவிப்புகூட இன்று நாளை வெளிவரலாம்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதற்கு நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை. அதற்கான தெளிவான வேலைத் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால் முழுமையான ஆதரவை வழங்குவோம். கம்பனிகளுக்கும் உரிய அழுத்தங்களை பிரயோகிப்போம்.
ஆனால், ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதே இந்த அரசாங்கத்தின் கபட நோக்கமாக இருக்கின்றது. அடுத்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை இத்தொகையை எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய தெளிவான கொள்கையும் இல்லை. எனவேதான், இது விடயத்தில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” என்றார்.
No comments:
Post a Comment