(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட மீராவோடை பகுதியில் காலையிலும், மாலையிலும் குரங்குகள் வந்து கடும் அட்டகாசம் புரிவதாக குரங்குகளால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டமாக வரும் குரங்குகள் பூத்துக் குலுங்கும் மரங்களை துவம்சம் செய்வதோடு வீட்டினுல் புகுந்து தொலைக்காட்சிப் பெட்டிகள், அலுமாரி, சமையலறைப் பொருட்கள் போன்றவைகளுக்கு சேதங்களை ஏற்படுத்துவதோடு வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்துகின்றன.
அத்தோடு கூட்டமாக வரும் குரங்குகள் சில சிறுவர்களை துரத்துவதாகவும், சிறுவர்களை தங்களுடைய சொந்த வளவில் விளையாட்டில் ஈடுபடாத வகையில் குரங்குகளின் தொல்லைகளால் வீட்டிற்குள் அடைத்து வைக்க வேண்டியவொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதிக்கு வரும் குரங்குகள் வீட்டின்மீது அங்குமிங்கும் பாய்ந்து திரிவதால் வீட்டின் ஓடுகள் உடைந்து மழைநீர் வீட்டுக்குள் செல்வதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு குரங்குகளை விரட்ட நாளாந்தம் பட்டாசு கொளுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குடும்பச் செலவில் பட்டாசுகளுக்கும் ஒருதொகை பணம் ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தங்களுடைய கவலைகளை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் குரங்குகள் பல்லாண்டு காலமாக பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த பிரதேசத்திலுள்ள அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் இதுவரைக்கும் எவ்விதமான தீர்வுகளும் பெறவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடையம் தொடர்பில் கூடிய கவனமெடுத்து இதற்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment