உரிமையை அடகு வைத்து எதனையும் அடைய இளம் சமுதாயம் விரும்பாது - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2019

உரிமையை அடகு வைத்து எதனையும் அடைய இளம் சமுதாயம் விரும்பாது

உரிமையை அடகு வைத்து எதனையும் அடைய எமது இளைஞர்கள் விரும்பமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன், மாயைகளைக் காண்பித்து இளைஞர்களை இழுக்க பலர் முற்படுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட கிராமத்திலுள்ள வெள்ளிமலை விளையாட்டுக் கழகத்திற்கு கிரிக்கெட் சீருடைகள் (புதன்கிழமை) இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “தற்போது எதற்கெடுத்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்குப் பலர் புறப்பட்டுள்ளனர். ஆனால் விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டு மக்களுக்காக செயற்பட்டு வரும் ஒரேயொரு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே.

தற்கால இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது என்றும் அவர்களுக்கு அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு போன்ற மாயைகளைக் காட்டி தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் எனவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்குத் தெரியாது தற்கால இளைஞர்கள் எந்தளவுக்கு எமது வரலாறுகளை விளங்கியிருக்கின்றார்கள் என்று. அவர்களுக்கு அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு என்பன தேவைதான். ஆனால் தங்கள் தன்மானம் என்ற உரிமையை அடகு வைத்து எதனையும் அடைய அவர்கள் விரும்பமாட்டார்கள்.
இதனை அனைவரும் விளங்கிக் கொள்ளும் காலம் வரும். அந்த உரிமையை என்றாவது எம்மக்கள் சுவாசித்து விட மாட்டார்களா என்று அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கட்சியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி தமிழருக்கு ஆதரவாக இருந்த பௌத்த பிக்கு, முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்ட போது தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டார்.

கல்முனை விவகாரத்தில் குறித்த பிக்குவுடன் ஆதரவாக செயற்பட்ட தமிழ் பிரதிநிதிகள், முல்லைத்தீவு விவகாரத்தில் பிக்குவின் செயற்பாட்டிற்கு எந்தவித கருத்தையும் சொல்லவில்லை. அவர்களால் எதிர்க்கவும் முடியவில்லை.

கல்முனை விவகாரத்திலும் சரி, நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்திலும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே குரல் கொடுத்தது. அந்த விடயங்கள் தொடர்பாக செயற்பட்டும் வந்தது” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment